கன்னி- 2026 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்

மாணவர்களுக்கு கல்வி நாட்டம் அதிகமாகும்.
Kanni
Published on

உள்ளுணர்வு நிறைந்த கன்னி ராசியினரே!

கன்னி ராசிக்கு 5, 6ம் அதிபதியான சனி பகவான் கோச்சாரத்தில் 27.7.2026 முதல் 10.12.2026 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். நல்ல பலன்கள் ஜாதகருக்கு ஏற்படும். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. உங்களின் குணங்கள் மற்றவர்களால் விரும்பக் கூடியதாக, போற்றப் படக்கூடியதாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் காரண காரியத்தோடு நன்கு யோசித்துச் செய்ய கூடிய திறன் பெற்றவராக இருப்பீர்கள்.

யாருடைய உதவியுமின்றி புதியவற்றை கற்றுக் கொள்ளக் கூடிய திறமை இருக்கும். பார்ப்பதற்கு இளமையான தோற்றம் இருக்கும். வெளிநாட்டுப் பயண முயற்சி சித்திக்கும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும். திருமண முயற்சியில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. புதிய சொத்து வாங்கும் முயற்சியில் நிலவிய தடைகள் அகலும். வீடு, வாகன, தொழில் கடனால் ஏற்பட்ட மனக் கவலைகள் குறையும்.

பண புழக்கம் அதிகரித்து பொருளாதார நிலை சீராகும்.பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். குழந்தைகள் மூலம் வருமானம் வரத் தொடங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.போட்டி. பகை, கடன் தொல்லை, வேலை, தொழில் பாதிப்பு குறையும்.திருமணத் தடை அகலும். பார்வை குறைபாட்டை சீரமைக்க ஏற்ற காலம்.கண்ணாடி போடலாம் அல்லது அறுவை சிகிச்சை செய்யலாம். அண்டை அயலாருடன் இருந்த பகைமை மாறும்.உற்றார் உறவினர்களின் வருகை மன மகிழ்ச்சியை தரும்.குடும்பத்தில் இருந்து வந்த குழப்பமான சூழ்நிலை மாறும்.குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகள் நிறைவேறும். இல்லையென்ற நிலை இனி இல்லை என்ற நிலை உருவாகும். மாணவர்களுக்கு கல்வி நாட்டம் அதிகமாகும்.

சனிபகவான் ரேவதி நட்சத்திர சாரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம் (27.7.2026 முதல் 9.10.2026 வரை)

கன்னி ராசியின் அதிபதி மற்றும் பத்தாம் அதிபதியான புதபகவானின் ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் வக்கிரம் அடையும் காலத்தில் தொழிலதிபர்களின் நீண்டநாள் கனவான ஏற்றுமதி, இறக்குமதி தொழில் வாய்ப்பை பெற்றுக் தருவார்.ஏற்கனவே வெளிநாட்டு வணிகம் செய்பவர்களுக்கு புதிய தொழில் ஒப்பந்தத்தை பெற்றுத் தருவார்.ஒரு சிலருக்கு தொழில் நிமித்த வெளிநாட்டு பயணத்தை ஏற்படுத்தித் தருவார். சிலர் பெரும் பொருள் பற்று மிகுதியால் சட்டவிரோதமான தொழிலில் ஈடுபடலாம்.உடல் உபாதைகள் கட்டுப்படும். தனிமையில் காலம் தள்ளியவர்களுக்கு பொழுதை கழிக்க நல்ல நட்பு கிடைக்கும். பய உணர்வு நீங்கும். தைரியம், தெம்பு ஏற்படும். தன்னை அழகு படுத்துவதில் ஆர்வம் அதிகரிக்கும்.தடைபட்ட காரியங்கள் தாமாகவே நடக்கும். தனவரவு மன மகிழ்வை தரும். உங்களை ஏளனம் செய்தவர்கள் மதிப்பு மரியாதை தருவார்கள். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம் , அதிர்ஷ்டக் குறைபாடு இருந்த இடம் தெரியாது. அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும்.மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடம் இணக்கமான சூழ்நிலை நிலவும் அரசு காரியங்கள் விரைவாக நிறைவேறும்.கவுரவப் பதவிகள் தேடி வரும்.உத்தியோகத்தில், பதவியில் நிரந்தரமற்ற தன்மை நீடிக்கும். சிறை தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம் (10.10.2026 முதல் 10.12.2026 வரை)

கன்னி ராசிக்கு 5,6-ம் அதிபதியான சனிபகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதியில் வக்கிரகதியில் செல்லும் காலத்தில் பூர்வீகத்தை விட்டு ஜீவனத்திற்கு வெளியேறும் சிந்தனை மேலோங்கும்.வெளியூரில் வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு பூர்வீகம் வந்து போக முடியாத சிக்கல் ஏற்படலாம்.உயர் கல்விக்கு பூர்வீகத்தை விட்டு செல்ல நேரும் உத்தியோகத்தில் அல்லது பதவியில் நிரந்தரமற்ற நிலை நீடிக்கும். விருப்பங்கள் நிறைவேறும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வீண் பேச்சை குறைப்பதால் குடும்பத்தில் கலகலப்பு கூடும்.மாமியார், மருமகள் உறவு மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பம். உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும்.தாய், தந்தையின் அன்பு,ஆதரவு, ஆசீர்வாதம் நிறைந்து இருக்கும். வீடு, வாகன யோகம்,குழந்தை பாக்கியம், பிள்ளைகளின் சுப காரியம் வெளியூர், வெளிநாட்டு தொழில் வேலை வாய்ப்பு என பலவிதமான பாக்கிய பலன்களும் கிடைக்கும்.ஆலயத் திருப்பணி, குரு உபதேசம் கிடைக்கும். உறவினர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். எதிர்பார்த்த கடன் தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.பூர்வீக சொத்து தொடர்பான வம்பு,வழக்குகள் மன சஞ்சலத்தை தரும் அல்லது இழக்க நேரிடும்.காதல் வலு இழக்கும். உள்ளுணர்வு சீராக இயங்காது. எதிர்பாராத பல தடைகள் வரும்.ஆயுள், ஆரோக்கியம் சீராகும். திடீர் அதிர்ஷ்டம் விபரீத ராஜ யோகம் ஏற்படலாம்.கடன் தொல்லை குறையும்.

திருமணம்

காதலன், காதலி பின்னால் சுற்றியவர்கள் வாழ்க்கையின் யதார்தத்தை உணர்ந்து பெற்றோர்களை மதித்து மனம் திருந்துவார்கள். பெற்றோர்கள் பெரியோர்களின் விருப்பப்படி திருமணம் நடக்கும்.

பெண்கள்

பெண்களுக்கு பிறந்த மற்றும் புகுந்த வீட்டாரின் ஆதரவும் ஆசியும் கிடைக்கும். கணவன் மனைவி உறவில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பணவரவு சரளமாக இருந்தாலும் சொந்த வீட்டு கனவு மனதை வாட்டும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையத் தொடங்கும்.ஆன்மீக சிந்தனை மேலோங்கும்.மருமகன், மருமகளால் சிறிய மனக்கசப்பு இருக்கும்.

முதலீட்டாளர்கள்

பதவியை தக்க வைக்க அதிக சிரமம் எடுக்க நேரும்.பொதுமக்களிடம் அன்பான அணுகுமுறையை பின்பற்றி மெளனமாக காரியம் சாதிக்க வேண்டிய நேரம்.எனினும் உங்களின் உழைப்பிற்கும், சேவைக்கும் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கும். சமூக அந்தஸ்தும், கெளரவமும் உயரும் .ஆனால் பொருளாதார ரீதியான பயன் இருக்காது. உங்களின் அனைத்து உழைப்பும் பொதுச் சேவையாக மட்டுமே இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள்

இடமாற்றமும் பதவி உயர்வும் நிச்சயம். அரசு வேலைக்கு முயற்சித்தவரின் கனவு நனவாகும். பொருளாதார நெருக்கடிகள் விலகும் உத்தியோகத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். உத்தியோகத்தில் ஸ்திர தன்மை ஏற்படும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தரமான நிம்மதியான வேலை கிடைக்கும். பணி நிரந்தரம் ஆகாதவர்களுக்கு வேலை நிரந்த மாகும். அரசு உத்தியோக வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். ஆனால் அதிகம் உழைத்து சிறிய பொருளை சம்பாதிக்க நேரும்.

அரசியல்வாதிகள்

முயற்சிகள் வெற்றியடையும். தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றிக் கொள்வீர்கள். இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சோர்வு நீங்கி உற்சாகமாக இருப்பீர்கள். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்.முன் கோபத்தைக் குறைத்துப் பொறுமையோடு செயல்பட வேண்டும்.நன்மைகள் மிகுதியாக நடக்கும்.அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு.கண்டகச் சனியின் காலம் என்பதால் அடிக்கடி கட்சி மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.வம்பு, வழக்கைத் தவிர்த்தல் நல்லது.கடுமையான முயற்சியையும் போராட்டத்தையும் அதிக உழைப்பையும் செலவிட வேண்டும்.

பரிகாரம்

சித்தர் பீடங்கள், ஜீவ சமாதிகளில் வழிபாடு செய்வதுடன், மடாதிபதிகள், சந்நியாசிகளை சந்திப்பது அவர்களுக்கு வஸ்த்திரம் சமர்ப்பித்து நல்லாசி பெறுவதால் செல்வாக்குப் பெருகும். ஸ்ரீ காயத்திரி தேவியை வழிபடவும். ஏழை பிராமணர்களுக்கு மஞ்சள் நிற ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்கள் தானம் தர சுகம் கிடைக்கும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com