search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை வெயில்"

    • புண்ணிய நதி என போற்றப்பட்ட வைகை தண்ணீரின்றி வறண்டும் காணப்படுகிறது.
    • பல்வேறு சிறப்புகள் வாய்ந்த வைகை ஆற்றில் தண்ணீர் நிரந்தரமாக ஓட வழிவகை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுவது வழக்கம். திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்நிகழ்ச்சிக்காக வருடம் தோறும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். திருவிழா முடிந்த பின்னர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்படும்.

    இப்படி சிறப்பு வாய்ந்த வைகை ஆற்றை தூர்வாராமலும், சில சமூக விரோதிகள் ஆற்றில் உள்ள மணலை அள்ளிச் சென்றதாகவும் பல இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் வைகையில் நிரந்தரமாக தண்ணீர் ஓடினால் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால் நாளடைவில் தண்ணீர் ஓடாமல் சாக்கடை கழிவுகள், வீடுகளில் இருக்கும் குப்பைகள் தான் வைகையில் மிதக்கிறது. புண்ணிய நதி என போற்றப்பட்ட வைகை தண்ணீரின்றி வறண்டும் காணப்படுகிறது.

    கடந்த சில வருடங்களுக்கு முன் வைகை வறண்ட நிலையில் அழகர் மலையானே தீயணைப்பு துறை உதவியால் தொட்டிக்குள் இறங்கி, ஆற்றில் இறங்கும் வைபவம் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் நடந்த வரலாறும் உண்டு. அதற்கு முன் திறந்து விடப்பட்ட வைகை நீர், வைகையில் மணல் இல்லாததால் மணல் அள்ளிய பள்ளத்தில் நீர் தேங்கி, மதுரைக்கு கூட வைகை நீர் வர முடியாத பரிதாபமான சூழல் நிலையும் இருந்தது. .

    வைகை ஆறு நீர்தாங்கிச் செல்லும் என்ற நிலை மாறி கொசுக்களை உற்பத்தி செய்யுமிடமாகவும், மனிதர்களின் கழிவுகளை கொட்டும் இடமாகவும் மாறி விட்டது. இறைச்சிக் கழிவுகள், சாக்கடை நீர் கலப்பதால் வைகை துர் நாற்றமுடன் நோய் பரப்பும் இடமாக காணப்படுகிறது. வைகை கரையோரம் முள் புதர் செடிகளும், ஆற்றுக்குள் நீரை அதிக அளவு உறிஞ்சும் கருவேல மரங்களும், மணல் அள்ளிய திருட்டு கும்பலிடம் தப்பித்த பகுதிகள் சிறு குன்று போலவும், மணல் அள்ளிய இடங்கள் அபாயகரமான பள்ளப்பகுதி என அறிவிக்கும் நிலையிலும் வைகை உள்ளது. கழிவு நீர் சாக்கடைகள் சங்கமிக்கும் வைகையை அழகர் ஆற்றில் இறங்கும் போது மட்டுமே கவனிக்கும் அரசு அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

    தற்போது ராமநாதபுரம் மாவட்டம் மக்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவைகளுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று மதுரையை வந்தடைந்தது. நேற்று மதியம் பெய்த கன மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இன்று இரண்டாவது நாளாக வைகையின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் செல்கிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த வைகை ஆற்றில் தண்ணீர் நிரந்தரமாக ஓட வழிவகை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரிக்கு மேல் வாட்டி வதைத்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் வைகையாற்றில் கலந்து வீணாகிறது. தண்ணீரை தேக்கி வைக்க கூடுதல் தடுப்பணைகளை கட்டவும் பாரம்பரிய மிக்க வைகை ஆற்றில் நிரந்தரமாக தண்ணீர் போடவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெங்களூருவில் கோடை மழை தொடர்ந்து பெய்வதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவுகிறது.
    • சிக்கமகளுரு, தட்சிண கன்னடா மற்றும் குடகு உள்பட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கோடை வெயில் சுட்டெரித்தது. வரலாறு காணாத வெப்பத்தால் மக்கள் கடுமையாக அவதி அடைந்தனர். இந்த நிலையில் இம்மாதத்தின் தொடக்கத்தில் அதாவது கடந்த 2-ந் தேதி கோடை மழை பெய்ய தொடங்கியது. அன்றில் இருந்து சீரான இடைவெளியில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 12 மணிக்கு நகரில் மழை பெய்யத்தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை கொட்டி தீர்த்தது. மெஜஸ்டிக், ராஜாஜிநகர், விஜயநகர், மைசூரு ரோடு, ராஜராஜேஸ்வரி நகர், கெங்கேரி, பட்டனகெரே, ஞானபாரதி, அத்திக்குப்பே, நெலமங்களா, தாசரஹள்ளி, சர்வதேச விமான நிலைய ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. கெங்கேரியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் மழை வெள்ளத்தில் மூழ்கியது. அப்போது பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள பெட்ரோல் டேங்கரில் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த டேங்கரில் இருந்த பெட்ரோலை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன் மதிப்பு லட்சக்கணக்கான ரூபாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    அதேபோல் நெலமங்களா, சர்வதேச விமான நிலைய ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. நள்ளிரவு நேரம் என்பதால் சாலைகளில் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களே ஓடின. இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. புறநகர் பகுதியான எசரகட்டாவில் 40 மில்லி மீட்டரும், பெங்களூரு நகரில் 20 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மாண்டியாவில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணாவில் காலை 9.30 மணி முதல் பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இங்கு அதிகபட்சமாக 9 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பெங்களூருவில் கோடை மழை தொடர்ந்து பெய்வதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவுகிறது. மாநிலம் முழுவதும் மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரை வானிலை ஆய்வு மையம் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 23 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை மற்றும் கல்புரகி, விஜயபுரா, யாதகிரி, ஷிமோகா, உடுப்பி, சிக்கமகளுரு, தட்சிண கன்னடா மற்றும் குடகு உள்பட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷிமோகா, குடகு, ஹாசன் மற்றும் மைசூர் மாவட்டங்களில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்ய கூடும் எனவும் பெங்களூருவில் மிதமான மழை பெய்ய வாய்யப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    • ஈரோடு மாநகர் பகுதியில் ஒரு சில நிமிடமே மழை பெய்தது.
    • பெருந்துறை, எலந்த குட்டைமேடு, வரட்டுப் பள்ளம், மொடக்குறிச்சி, தாளவாடி போன்ற பகுதியில் மிதமான மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. கொளுத்தும் வெயிலால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் அவதி அடைந்து வந்தனர்.

    வரலாறு காணாத வெயிலால் மக்கள் புழுக்கத்தால் சொல்ல முடியாத துயரத்தில் இருந்து வந்தனர். மழை எப்போது பெய்யும், குளிர்ச்சியான சூழ்நிலை எப்போது வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. நேற்று மட்டும் 106.72 டிகிரி பதிவாகியிருந்தது.

    இந்நிலையில் ஈரோடு புறநகர் பகுதியில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி அணைப் பகுதியில் 53 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பலத்த மழை காரணமாக கோபி பஸ் நிலையம் அருகே ஒரு வேப்பமரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மேல் விழுந்தது. நல்ல வேலையாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தி மின் இணைப்பை சரி செய்தனர்.

    இதேப்போல் கவுந்தபாடி, நம்பியூர், குண்டேரிப்பள்ளம், பவானி போன்ற பகுதிகளிலும் இரவு நேரத்தில் கனமழை பெய்தது. பவானியில் இரவில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. சித்தோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரவில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. பெருந்துறை, எலந்த குட்டைமேடு, வரட்டுப் பள்ளம், மொடக்குறிச்சி, தாளவாடி போன்ற பகுதியில் மிதமான மழை பெய்தது.

    ஈரோடு புறநகர் பகுதியில் நேற்று இரவு பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனால் அதே நேரம் ஈரோடு மாநகர் பகுதியில் ஒரு சில நிமிடமே மழை பெய்தது. இதனால் ஈரோடு மாநகர் பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கொடிவேரி-53, கவுந்தப்பாடி-39, நம்பியூர்-33, பவானி-29, குண்டேரிப்பள்ளம்-26, கோபி-12.20, பெருந்துறை-8. 20, எலந்த குட்டை மேடு-6.40, வரட்டுப்பள்ளம் அணை-4.40, மொடக்குறிச்சி-4, தாளவாடி-1.50.

    • இளநீர், மோர், எலுமிச்சை ஜூஸ் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை கொடுக்கலாம்.
    • கடுமையான வெயில் நேரத்தில் வெளியே விளையாக அனுமதிக்க வேண்டாம்.

    சிறு குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது என்பதே பெற்றோருக்கு ஒரு சவாலான காரியம் தான். எனினும் கோடை வெயிலில் குழந்தைகளை பாதுகாப்பது என்பது இன்னும் கடினமானது.

    பள்ளி விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளை கோடை வெயிலில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

    * குழந்தைகள் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகள் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பார்கள் என்று காத்திருக்காமல், அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும்.

    * வெறும் தண்ணீர் மட்டும் குடிக்க சில குழந்தைகளுக்கு பிடிக்காது. அதனால் இளநீர், மோர், எலுமிச்சை ஜூஸ் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை கொடுக்கலாம்.

    * கடுமையான வெயில் நேரத்தில் வெளியே விளையாக அனுமதிக்க வேண்டாம். நாமும் குழந்தைகளை வெளியே அழைத்து செல்லாமல் இருப்பது நல்லது.

    * அப்படி வெளியே செல்லும்போது, தொப்பி, சன்ஸ்கிரீன், சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும் கண்ணாடிகள் போன்றவற்றை அணிவிக்க வேண்டும்.

    * குழந்தைகளுக்கு லேசான, பருத்தி உடைகளை அணிவிக்க வேண்டும்.

    * குழந்தைகளுக்கு சத்தான உணவாக கொடுக்க வேண்டும். 

    * பழங்கள், காய்கறிகள், சூப்கள், தயிர் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் கொடுக்க வேண்டும். வறுத்த, எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    * குழந்தைகளுக்கு கோடை காலத்தில் ஏற்படும் வெப்ப நோய்கள், சூரிய ஒளியின் தாக்கம் பற்றி கூற வேண்டும்.

    * குழந்தைகளை வெயில் நேரத்தில் வெளியில் விளையாடுவதை தவிர்க்க, குழுவாக சேர்ந்து ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், கதை கேட்பது, வீட்டிற்குள் விளையாடுவது என்று பழக்கலாம்.

    • செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது.
    • செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன.

    குளிர்பானம் என்பது அதிக அளவில் சர்க்கரை கலக்கப்பட்ட பானம். இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. உடல் நலத்துக்கும் கெடுதல். சிலர் உடலுக்கு புத்துணர்வு அளித்து ஆரோக்கியம் அளிக்கிறது என்று நினைத்துக்கொண்டு எனர்ஜி டிரிங்ஸ் குடிக்கின்றனர். இதுவும்கூட உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    கோடை வெயில் நேரத்தில் குளிர்பானங்கள் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி தரும் என்றாலும் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். 

    குழந்தைகளுக்கு வளர்ச்சியில் பாதிப்பு, எலும்பு அடர்த்திக் குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை, கார்பன் டைஆக்ஸைடு, பாஸ்பாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், காஃபின், செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள் உள்ளிட்டவை உள்ளன.

    செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இது பற்களில் பாக்டீரியாக்கள் வளர வழிவகுக்கும். இந்த பாக்டீரியாக்கள் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. இது பற்சிதைவுக்கு வழிவகுக்கும்.

    குளிர்பானம் குடிப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை குளிர்பானம் அருந்தும் பழக்கம் மேலும் அதிகரிக்கிறது.

    செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன. இது எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

    மேலும் சில ஆய்வுகள் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பது சில வகையான புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கலாம் என்று பரிந்துரைக்கின்றன. செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீர், பழச்சாறு, லஸ்ஸி, மோர் போன்ற பானங்களை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

    • வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
    • பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படாதவாறு பல்வேறு இடங்களில் உப்பு-சர்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகலில் வெப்ப அலை வீசுவதால் வெளியில் செல்லும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

    நெல்லையில் கடந்த 15 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடந்த 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திர வெயில் அனலாக சுட்டெரிப்பதால் மக்கள் வெளியில் நடமாட முடியாதவாறு தவிக்கின்றனர். கடந்த சில தினங்களாக 106 டிகிரி வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படாதவாறு பல்வேறு இடங்களில் உப்பு-சர்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது.

    நெல்லையில் நேற்று முன்தினம் 106.7 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் பெரிதும் தவிப்புக்கு உள்ளானார்கள். அப்போது நெல்லை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பச்சைக்கிளி மயங்கி விழுந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பாலசுப்பிரமணியன் அந்த கிளியை எடுத்து சென்று, சக போலீஸ்காரர்கள் உதவியுடன் அங்குள்ள குடிநீர் தொட்டியில் வைத்து தண்ணீர் தெளித்தார்.

    அதற்கு தண்ணீரும் பருக கொடுத்தார். இதையடுத்து கண் விழித்த கிளி தன்னை மெல்ல ஆசுவாசப்படுத்தி கொண்டு பறக்க தயாரானது. அதற்கு பொரிகடலையை போலீசார் வழங்கினர். அவற்றை உண்ட பின்னர் கிளி பறந்து சென்றது. வெயிலில் மயங்கிய பச்சைக்கிளிக்கு தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்திய நிகழ்ச்சி காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

    • அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
    • இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    10-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    11-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    12-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    13 மற்றும் 14-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இன்று முதல் 12-ந்தேதி வரை: அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

    08.05.2024 முதல் 12.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 40°-41° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38°-39° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

    08.05.2024 முதல் 12.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 40-55% ஆகவும், மற்ற நேரங்களில் 50-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55-85% ஆகவும் இருக்கக்கூடும்.

    இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலையில் / இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • கதலி, நேந்திரம் போன்ற வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
    • தாளவாடி பகுதியில் மழை கொட்டி தீர்த்தது.

    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று நள்ளிரவு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆலாம்பாளையம், பனையம்பள்ளி போன்ற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கதலி, நேந்திரம் போன்ற வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    அறுவடைக்கு இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ரூ.35 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளதால் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேப்போல் தாளவாடி பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. ஈரோடு மாநகர் பகுதியில் பெரிய அளவில் மழை பெய்யாவிட்டாலும் லேசாக சாரல் மழை பெய்தது.

    • சுத்தமான பருத்தி உடைகளை அணிய வேண்டும்.
    • குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.

    கோடை வெயிலில் கர்ப்பிணி பெண்களுக்கு அதிகமாக வியர்க்கும். அதிக வெப்பநிலை, நீர்ச்சத்து குறைவு மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படும். எனவே கோடை வெயிலில் கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்க சில வழிமுறைகள்:

    * அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கலாம் என்று காத்திருக்காமல் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

    * இளநீர், எலுமிச்சை பழச்சாறு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை குடிக்க வேண்டும். விருப்பப்படும் பழங்களை சாப்பிட வேண்டும். உணவில் அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * சுத்தமான பருத்தி உடைகளை அணிய வேண்டும். வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    * காலை 10 மணி முதல் மாலை 4 மணி வெயில் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் வெளியே செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    * அவசியமாக வெளியே செல்ல வேண்டியிருந்தால் குடை பயன்படுத்தலாம். கருப்பு நிற குடையை தவிர்க்க வேண்டும்.

    * குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. 

    * உணவுகளை 5 வேளையாக பிரித்து சாப்பிட வேண்டும். காரமான, புளிப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    * பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிகம் உண்ண வேண்டும்.

    * தூக்கம் வரும் நேரத்தில் படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். தூங்குவதால் மன அழுத்தம் குறையும். 

    • பலத்த காற்றுடன் மழை பெய்தது.
    • வியாபாரிகளின் நெல் மூட்டைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    செஞ்சி:

    கடந்த சில தினங்களாக செஞ்சி பகுதியில் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் திடீரென கருமையாக மேகம் சூழ்ந்தது.

    அதனைத் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் செஞ்சி-திருவண்ணாமலை சாலை பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் சரிந்து விழுந்தன. மேலும் செஞ்சி கூட்ரோடு பகுதியில் நிழலுக்காக போடப்பட்டிருந்த பந்தலும் சரிந்து விழுந்தது. கோடைக்காலம் என்பதால் கழிவுநீர் கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டிருந்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியது. செஞ்சி கமிட்டிக்கு இன்று விவசாயிகள் கொண்டு வந்திருந்த சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மற்றும் நேற்று திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்த வியாபாரிகளின் நெல் மூட்டைகள் உட்பட சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.


    ஏற்கனவே வியாபாரிகளின் நெல் முட்டைகள் குடோனில் வைக்கப்பட்டிருப்பதால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் நனைவதற்கு வாய்ப்பு ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். எனவே வியாபாரிகளின் நெல் மூட்டைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    செஞ்சியை அடுத்த அங்கராயநல்லூர் என்ற கிராமத்தில் இடி விழுந்து ஆறுமுகம் என்பவரது 3 எருமை மாடுகள் பரிதாபமாக இறந்தன. செஞ்சி-விழுப்புரம் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் இருந்த சிமெண்ட் சீட் போட்ட வீடு காற்றில் விழுந்ததால் உள்ளே சிக்கி கொண்டிருந்த அலமேலு (வயது 80) கஸ்தூரி (வயது 20) ஆகியோரை செஞ்சி தீயணைப்பு வீரர் முருகன் உள்ளிட்ட தீயணைப்பு படையினர் விரைந்து அவர்களை மீட்டனர்.

    • திருவையாறு சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டின.
    • சீர்காழியில் இடி, மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்து உள்ளதால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாவே கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக சுட்டெரித்தது. பகலில் கடும் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதியடைந்து வந்தனர்.

    தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் வரலாறு காணாத வெப்பத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டனர். தினமும் 100 டிகிரியை தாண்டி வெப்பத்தின் அளவு பதிவானது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர்.

    இந்த நிலையில் இன்று காலை தஞ்சையில் வழக்கத்திற்கு மாறாக குளிர்ந்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சில நிமிடம் மிதமான அளவில் மழை பெய்தது. பின்னர் வெயில் அடித்தது. இதேப்போல் திருவையாறு சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டின.

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் இன்று காலை காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கொள்ளிடம் புத்தூர், தைக்கால், ஆச்சாள்புரம், புதுப்பட்டினம், சந்தபடுகை, திட்டுபடுகை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. சீர்காழியில் இடி, மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்து உள்ளதால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    இதேப்போல் நாகை மாவட்டம் நாகூர், பணக்குடி, மஞ்சக்கொல்லை, புத்தூர், சிக்கல் உள்ளிட்ட பல இடங்களிலும் கோடை மழை பெய்து குளிர்வித்தது.

    தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் பெய்த மழையால் பூமி குளிர்ந்ததோடு வெப்பம் ஒரளவு தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும்கோடை குறுவை சாகுபடி செய்திருந்த விவசாயிகள் மும்முனை மின்சாரம் இன்றி பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் குறுவை விதைப்புகள் கருகி வந்ததால் வேதனையில் இருந்த நிலையில் தற்போது பெய்த கோடை மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 43 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 44.89 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81 அடியாக இருந்தது. தற்போது அதற்கு பாதியாக குறைந்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் கடல் போல் பிரம்மாண்டமாக காட்சியளித்த பவானிசாகர் அணை தற்போது குளம் -குட்டை போல் சுருங்கி காட்சியளிக்கிறது.

    பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 43 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பெரும்பள்ளம் அணை, குண்டேரி அணை, வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பவானிசாகர் அணையில் இன்னும் 9 அடி நீர் குறைந்தால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு விடும் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    ×