search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசிங்கம் பிடித்த அமெரிக்காவுக்குள் கால் பதிக்க மாட்டேன் - பிலிப்பைன்ஸ் அதிபர் திட்டவட்டம்
    X

    அசிங்கம் பிடித்த அமெரிக்காவுக்குள் கால் பதிக்க மாட்டேன் - பிலிப்பைன்ஸ் அதிபர் திட்டவட்டம்

    அசிங்கம் பிடித்த நாடான அமெரிக்காவுக்குள் கால் பதிக்க மாட்டேன் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
    மணிலா:

    அமெரிக்காவின் மிக நெருக்கமான நாடுகளில் ஒன்றாக இருந்த பிலிப்பைன்ஸ் அதிபராக பதவியேற்ற ரோட்ரிகோ டுட்டர்ட்டே போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக மிக தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறார். இவர்களை கண்டதும் சுட்டுக் கொல்லுமாறு அதிபர் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு முன்னாள் நட்புநாடான அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வந்துள்ளது.

    இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே அமெரிக்காவுக்கு செல்லப் போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

    கடந்த ஏப்ரல் மாதம் ரோட்ரிகோ டுட்டர்ட்டேவுடன் தொலைபேசியில் உரையாடியபோது, போதைப் பொருள் கடத்தல் பேர்வழிகள் மீது அவர் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கையை டிரம்ப் பாராட்டியதாகவும், அமெரிக்காவுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. டொனால்ட் டிரம்ப்பின் இந்த அணுகுமுறைக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    ரோட்ரிகோ டுட்டர்ட்டேவின் ஆட்சிக் காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரிப்பதற்காக அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கமிஷன் முன்னர் சமீபத்தில் ஆஜரான மாஸாச்சூசெட்ஸ் மாநில பாராளுமன்ற உறுப்பினரான ஜேம்ஸ் மெக்கோவென் என்பவர், ’போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என்று கூறி பலரை சுட்டுக்கொன்றதன் மூலம் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே அமெரிக்கா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், அவரது கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரோட்ரிகோ டுட்டர்ட்டே, அசிங்கம் பிடித்த அமெரிக்காவுக்குள் நான் எப்போதும் கால் பதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

    ஜேம்ஸ் மெக்கோவென் தெரிவித்த கருத்து தொடர்பாக இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், பிலிப்பைன்ஸ் அதிபராக எனது பதவிக் காலத்திலோ, அதற்கு பிறகோ.., அமெரிக்காவுக்கு நான் செல்லக்கூடிய சந்தர்ப்பம் ஒருபோதும் நேராது. அந்தப்பயல் (ஜேம்ஸ் மெக்கோவென்) நான் அமெரிக்காவுக்கு வருவேன் என்று எப்படி நினைக்கிறான்? என்று கடுப்பாக பதில் அளித்துள்ளார்.

    நான் அமெரிக்காவை பார்த்திருக்கிறேன். அது அசிங்கம் பிடித்த நாடு. முதலில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் கைதிகளாக பிடிபட்டவர்களில் பலரை கொன்ற தங்கள் நாட்டின் மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றம் முன்வரட்டும். இல்லாவிட்டால், உங்கள் (அமெரிக்கா) கடந்த பாவங்களின் மீது நான் விசாரணை நடத்த நேரிடும் என்றும் அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.
    Next Story
    ×