search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூசி அருகே கள்ளக்காதலன் கிணற்றில் குதித்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை
    X

    தூசி அருகே கள்ளக்காதலன் கிணற்றில் குதித்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை

    தூசி அருகே கள்ளக் காதலன் கிணற்றில் குதித்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தூசி:

    திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே பிள்ளான்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி சாந்தி (வயது 45). இவர்களின் மகள் ஜெயந்தி (27).

    இவருக்கும் குன்ன வாக்கம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ஜெயந்தி தனது கணவரை பிரிந்து திருத்தணியை சேர்ந்த வேலு (43) என்பவருடன் சுமார் 4 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலுவுக்கும், ஜெயந்திக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஜெயந்தி தனது தாயார் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    நேற்று முன்தினம் மாலை வேலு, சாந்தி வீட்டுக்கு சென்று ஜெயந்தியிடம் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். இதற்கு ஜெயந்தி மறுத்து விட்டார்.

    இதையடுத்து வேலு அங்கிருந்து திடீரென ஓடி அருகில் உள்ள கிணற்றில் குதித்து விட்டார். உடனடியாக ஜெயந்தியும், சாந்தியும் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் கிணற்றுக்குள் குதித்து வேலுவை காப்பாற்றினர். இதையடுத்து ஜெயந்தியிடம் அவரது தாயார் உன்னால் தான் வேலு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்று கண்டித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த ஜெயந்தி வீட்டுக்கு சென்று கதவுகளை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். பின்னர் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தன் மேல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டவுடன் அருகில் உள்ளவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். எனினும் கதவை உடைப்பதற்குள் ஜெயந்தி தீயில் கருகி உயிரிழந்தார்.

    இதுகுறித்து தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×