search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி அருகே திருவிழாவை பார்க்க சென்ற தொழிலாளி கார் மோதி பலி
    X

    தர்மபுரி அருகே திருவிழாவை பார்க்க சென்ற தொழிலாளி கார் மோதி பலி

    தர்மபுரி அருகே திருவிழாவை காண சென்ற தொழிலாளி கார் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் ஏ.ரெட்டி அள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 42). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் தர்மபுரியில் உள்ள ஒரு பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று பக்கத்து ஊரில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை காண வேண்டி நேற்று இரவு வீட்டில் இருந்து புறப்பட்டு பக்கத்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

    இரவு 9.30 மணி அளவில் மேல்மாட்டுக்காரனூர் என்ற இடத்தில் அவர் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக கிருஷ்ணகிரியில் இருந்து சேலத்தை நோக்கி வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் பலத்த அடிபட்டு ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து தொழிலாளி ஆனந்தன் பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து டிரைவர் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மீது மோதிய காரை போலீசார் கைப்பற்றினர்.

    ஆனால் காரை ஓட்டிய டிரைவர் தப்பி ஓடி விட்டதால் அவர் யார்? எந்த ஊரை? சேர்ந்தவர்? என தெரியவில்லை. அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    திருவிழாவை காண சென்ற தொழிலாளி கார் மோதி பலியான சம்பவம் அந்த ஏ.ரெட்டி அள்ளி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×