ஆனிச்செவ்வாய்...விரதம் இருந்து துர்கையை வேண்டி விளக்கேற்றுவோம்!

ஆனி மாதம் ஆண்டாளுக்கும் உரிய அற்புத மாதம்.நடராஜ பெருமானை வணங்குவதற்கு உரிய அருமையான மாதம்.
ஆனிச்செவ்வாய்...விரதம் இருந்து துர்கையை வேண்டி விளக்கேற்றுவோம்!
Published on

ஆனி மாதம் பிறந்துவிட்டது. ஆனி மாதம் என்பது சைவ, வைணவ பாகுபாடுகள் இல்லாமல், எல்லாப் பெண் தெய்வங்களையும் கொண்டாடுகிற அற்புதமான மாதம். பெண் தெய்வங்கள் அனைத்துமே சக்தியின் அம்சம். சக்தி என்பவள் பராசக்தி. அவளே அத்தனை தெய்வங்களுக்கும் சக்தியையும் சாந்நித்தியத்தையும் வழங்கக் கூடியவள்.

அவளை வணங்க வணங்க, நம்மைச் சுற்றியுள்ள துர்தேவதைகள் விலகிவிடுவார்கள். நல்ல சக்திகள் நம்மைச் சூழ்ந்து அரணெனக் காத்தருளும் என்பது ஐதீகம்.

ஆனி மாதம் ஆண்டாளுக்கும் உரிய அற்புத மாதம். நடராஜ பெருமானை வணங்குவதற்கு உரிய அருமையான மாதம். இந்த மாதத்தில், விரதம் இருந்து நமக்குத் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லி, வீட்டில் விளக்கேற்றி பாராயணம் செய்வது சத்விஷயங்களை நமக்குத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஆனி மாத செவ்வாய், சாந்தமான தெய்வங்களையும் உக்கிரமான தெய்வங்களையும் விரதம் இருந்து வழிபடுவதற்கு உரிய நன்னாள். இன்றைய ஆனிச் செவ்வாயில், விரதம் இருந்து துர்கையை வழிபடுவது ரொம்பவே விசேஷம்.

செவ்வாய்க்கிழமை கிழமையில் விரதம் இருந்து ராகுகால வேளையில், துர்கையை மனதார நினைத்து, எலுமிச்சை தீபம் ஏற்றுவோம். துஷ்ட சக்திகளில் இருந்து விடுபடுவோம். எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து அருள்புரிவாள் துர்காதேவி.

ஆனிச்செவ்வாயில், விரதம் இருந்து துர்காதேவி, பிரத்தியங்கிரா தேவி உள்ளிட்ட தெய்வங்களை வணங்கி வழிபடுவோம். வாராஹி, காளிகாம்பாள், முப்பிடாதி, செல்லியம்மன் உள்ளிட்ட கிராம தெய்வங்களை மனதார வேண்டுவோம். மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும்.

கிராம தெய்வங்களையும் எல்லை தெய்வங்களையும் வீட்டில் இருந்தபடியே வழிபடுவோம். எலுமிச்சை தீபமேற்றி வேண்டிக்கொள்வோம். இன்னல்கள் அனைத்தும் விலகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com