வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி எளிய முறையில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி நடந்தது குறிப்பிடத்தக்கது.
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி
Published on

உலக மக்களின் பாவங்களுக்காக 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த ஏசுவின் பாடுகளை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். ஏசு சிலுவையில்  உயிர் விட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. ஏசு உயிர்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில்  கடந்த மாதம்  (மார்ச்)  2-ந் தேதி  தவக்காலம் தொடங்கியது. கடந்த 10-ந்தேதி குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.  அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பெரிய வியாழனையொட்டி பாதம் கழுவும்  நிகழ்ச்சி நடந்தது.

வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் நேற்று மாலை புனித வெள்ளி சிறப்பு திருப்பலி  பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில்  நடைபெற்றது. இதை தொடர்ந்து இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், திருச்சிலுவை ஆராதனை, திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவை பாதை, சிறப்பு மறையுரை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

இதையடுத்து  பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குதந்தை, உதவி பங்குத்தந்தையர்கள் கலையரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த  சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் சொரூபத்தை முத்தமிட்டனர். இதையடுத்து சிறிய அளவிலான ஏசு சொரூபத்தை பவனியாக எடுத்து சென்றனர். அப்போது அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்கள் ஏசு சொரூபத்தை முத்தமிட்டனர்.

பின்னர் கலையரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான ஏசு சொரூபத்தை  சிலுவையில் இருந்து இறக்கி பவனியாக கீழ்கோவிலுக்கு எடுத்து சென்றனர். இதில் பங்குத்தந்தை அற்புதராஜ் , பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி  எளிய முறையில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி நடந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com