

சென்னையில் தவறான வார்த்தைகளில் கேள்விகளை பொதுமக்களிடம் கேட்டு யூ-டியூப் சேனலில் வீடியோ பதிவிட்டதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி இணையதளம் மூலம் மிரட்டுவதில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
தற்போது கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் அதிகப்படியாக செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குழந்தைகள் அதிக அளவில் சமூகவலைதளங்களை உபயோகிக்க வாய்ப்பு உள்ளது.
சமூக வலைதளங்களில் ஆபாசம் நிறைந்த படங்கள், வார்த்தைகள் நிறைய வருவதால் குழந்தைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. யூடியூப்பில் ஆபாசமாக பதிவிட்ட சில பதிவுகள் நீக்கம் செய்திருந்தாலும் பல பதிவுகள் நீக்கம் செய்யப்படவில்லை. பலர் நூதன முறையில் ஆபாச வீடியோக்கள், பதிவுகளை வெளியிடுகின்றனர்.
யூடியூப்பை பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தடை செய்துள்ளன. வருமுன் காப்பதே சிறந்தது. எனவே சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள், கருத்துகளை தணிக்கை செய்ய வேண்டும்.
மேலும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கட்டுப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் வழிமுறைப்படுத்தவும், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். என நெல்லையை சேர்ந்த உமாமகேசுவரன், மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருக்கிறார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, “யூடியூப், பேஸ்புக், கூகுள் மற்றும் சமூக வலைதளங்கள் தங்களுக்கான தணிக்கையை தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். புகார்கள் ஏதேனும் வரும் பட்சத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், யூடியூப், பேஸ்புக், கூகுள் ஆகிய நிறுவனங்கள் இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.