பிரேசிலில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அபராதம் - காரணம் தெரியுமா?

ஆப்பிள் நிறுவனம் இரண்டு மில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்த பிரேசில் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
ஆப்பிள்
ஆப்பிள்
Published on

பிரேசில் நாட்டின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமான ப்ரோகான்-எஸ்.பி. ஆப்பிள் நிறுவனத்திற்கு 2 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 14,49,26,800 அபராதம் விதித்து உள்ளது. ஐபோன் 12 மாடலுடன் சார்ஜர் வழங்காததே இதற்கு காரணம் என அந்த ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

தவறாக விளம்பரப்படுத்துதல், சார்ஜர் இல்லாமல் சாதனத்தை விற்பது மற்றும் முறையற்ற வாசகங்களை பயன்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு ப்ரோகான்-எஸ்.பி. அபராதம் விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. சார்ஜர் வழங்காமல் இருப்பதால் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பதை ஆப்பிள் சரியாக விளக்கவில்லை என்றும் ப்ரோகான்-எஸ்.பி. தெரித்து இருக்கிறது.

முன்னதாக ஐபோன் 12 உடன் சார்ஜர் வழங்கப்படாததால், அதன் விலையை குறைக்க ப்ரோகான்-எஸ்.பி. ஆப்பிள் நிறுவனத்திற்கு கேள்வி எழுப்பியிருந்தது. எனினும், ஆப்பிள் சார்பில் எந்த பதிலும் வழங்கப்படாததால் தற்போது அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

“பிரேசில் நாட்டில் கடுமையான நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விதிகள் மற்றும் நிறுவனங்கள் இயங்கி வருவதை ஆப்பிள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த சட்ட விதிகள் மற்றும் நிறுவனங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்” என ப்ரோகான்-எஸ்.பி. ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் பெர்னான்டோ கேபெஸ் தெரிவித்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com