

ஒப்போ நிறுவனத்தின் முற்றிலும் புதிய A7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. பிரபல டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ள தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதில் அதிகபட்சம் 10,000mAh பேட்டரி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது உண்மையாகும் பட்சத்தில் இத்தனை பெரிய கேமரா சென்சார் கொண்ட முதல் ஒப்போ ஸ்மார்ட்போனாக இது இருக்கும். முன்னதாக கடந்த ஜூன் மாத வாக்கில் வெளியான தகவல்களிலும், ஒப்போ நிறுவனம் 10,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது.
அம்சங்கள்:
தற்போது லீக் ஆகி இருக்கும் தகவல்களின் படி ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.78 இன்ச் ஃபிளாட் AMOLED டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 10,000mAh பேட்டரி, 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அளவில் பெரிய பேட்டரி வழங்கப்படும் போதிலும், இந்த ஸ்மார்ட்போன் 8.47mm தடிமனாக இருக்கும் என்றும் இதன் எடை 226 கிராம்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒப்பிட்டளவில் இது ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலை விட மெல்லியதாக இருக்கும்.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 50MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஒப்போ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மூலம் ஃபிளாக்ஷிப் தர கேமரா அனுபவத்திற்கு மாற்றாக நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்குவதில் அதிக கவனம் செலுத்துவதாக தெரிகிறது.
முதற்கட்டமாக ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் வெளியாவது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.