இந்தியர்களை அதிகம் பாதித்த மேக் ஒ.எஸ். மால்வேர்

மேக் ஒ.எஸ். தளத்தில் இந்திய பயனர்களை அதிகம் பாதித்த மால்வேர் பற்றிய விவரங்கள் சமீபத்திய ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது.
மேக் ஒ.எஸ்.
மேக் ஒ.எஸ்.
Published on

மேக் ஒ.எஸ். தளத்தில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட ஷ்லேயர் மால்வேர் மூலம் இந்தியர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர் என சைபர்செக்யூரிட்டி ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷ்லேயர் மால்வேர் நெட்வொர்க், பொழுதுபோக்கு வலைதளம் மற்றும் விக்கிப்பீடியா தளங்களில் பரவுகிறது. 

இதனால் நம்பத்தகுந்த வலைதளங்களை பயன்படுத்தும் போதும், பயனர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளது. இந்த பாதிப்பு மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில்- அமெரிக்கா (31 சதவீதம்), இந்தியா (18.9 சதவீதம்), ஜெர்மனி (14 சதவீதம்), ஃபிரான்ஸ் (10 சதவீதம்) மற்றும் பிரிட்டன் (10 சதவீதம்) உள்ளிட்டவை இருக்கின்றன.

மேக் ஒ.எஸ். தளத்தில் கண்டறியப்பட்ட மால்வேர் பயனர் சாதனங்களில் ஆட்வேர்- பயனர் விவரங்களை சேகரிக்கும் விளம்பரங்களை பதிவிட்டு, பயனர்களின் தேடல்களை அறிந்து கொண்டு விளம்பர நிறுவனங்களின் குறுந்தகவல்களை அதிகளவு வெளியிட வழிவகை செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஷ்லேயர் மால்வேர் ஜனவரி முதல் நவம்பர் 2019 வரையிலான காலகட்டத்தில் கேஸ்பர்ஸ்கை சேவைகளை இன்ஸ்டால் செய்யப்பட்ட மேக் ஒ.எஸ். சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஷ்லேயர் மால்வேர் மேக் ஒ.எஸ். தளத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய அச்சுறுத்தல்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 

பயனர் விவரங்களை சேகரிக்க புதிய வழிகளை தேடும் சைபர் குற்றவாளிகளுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் இயங்குதளமாக மேக் ஒ.எஸ். இருக்கிறது. இதன் காரணமாகவே இதுபோன்ற பிழைகள் நம்பத்தகுந்த வலைதளங்களிலும் காணப்படுகின்றன என்று கேஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வாளர் ஆன்டன் இவானோவ் தெரிவித்தார்.

மேக் ஒ.எஸ். தளத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பெரும்பான்மை மால்வேர்கள் சட்டவிரோத விளம்பர முறைகளை பயன்படுத்துவதால், பயனர்களின் பணத்தை அபகரிப்பது போன்ற அபாயங்களை கொண்டிருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com