இன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தலாம்

கூகுள் க்ரோம் புதிய அப்டேட் மூலம் சேர்க்கப்பட்டிருக்கும் வசதியை கொண்டு பயனர்கள் இன்டர்நெட் இன்றி செய்திகளை படிக்க முடியும்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஸ்மார்ட்போனில் இணைய சேவையை மொபைல் டேட்டா மூலம் பயன்படுத்துவது எல்லா நேரங்களிலும் சிறப்பான அனுபவமாக இருப்பதில்லை. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4ஜி நெட்வொர்க் பரப்பளவு தினந்தோரும் நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும், அதிவேக இணைய இணைப்பு பரவலாக கிடைப்பதில்லை. தினசரி டேட்டாவை கொண்டு பிரவுசிங் செய்ய நினைத்தால், டேட்டா வேகம்நம் அமைதிக்கு ஆப்பு வைக்கிறது.

இதுபோன்ற பிரச்சனைகளை சரியாக புரிந்து வைத்திருக்கும் கூகுள், தனது க்ரோம் செயலியில் புதிய சேவையை சேர்த்திருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான க்ரோம் செயலி நீங்கள் வைபை நெட்வொர்க் பயன்படுத்தும் போது, உங்களுக்கு பயன்தரும் செய்திகள் மற்றும் தானாக டவுன்லோடு செய்து வைக்கும். இவற்றை இன்டர்நெட் இல்லாத நேரங்களில் பயன்படுத்த முடியும். இதனால் டேட்டா இணைப்பு சீராக இல்லாத சமயங்களிலும் பயனுள்ள செய்திகளை படிக்க முடியும்.

மூன்றாம் தரப்பு செயலிகளின் மூலம் சில இணையப்பக்கங்களை ஆஃப்லைனில் சேமித்துக் கொள்ளும் வசதி வழங்கப்படும் நிலையில், இவற்றை பயன்படுத்த செய்திகளை பயனர் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். கூகுள் க்ரோமின் புதிய அப்டேட் பயனர் வசிக்கும் இடம் மற்றும் விருப்பங்களை புரிந்து கொண்டு தானாக செய்திகளை டவுன்லோடு செய்யும்.

கூகுள் உங்களுக்கென தேர்வு செய்யும் செய்திகள் எல்லா நேரங்களிலும் உங்களுக்கு விருப்பமானதாக இருக்காது என்றாலும், பல முறை இவை உங்களுக்கு பயன்தரும் ஒன்றாக இருக்கும். எனினும் இந்த சேவை தானாக இயங்கும் என்பதால் ஆஃப்லைனில் இருக்கும் போதோ அல்லது பயணங்களின் போதோ செய்திகளை வாசிக்க நினைப்போருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இணைய இணைப்பு குறைவாக இருக்கும் பகுதிகள் மற்றும் சீரற்ற இணைய வசதி கொண்ட சந்தைகளில் வழங்க ஏதுவாக இந்த அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்திருக்கிறது. முதற்கட்டமாக இந்தியா, நைஜீரியா, இந்தோனேஷியா, பிரேசில் உள்ளிட்ட 100 நாடுகளில் வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com