ஆப்பிள் சஃபாரி பிரவுசரில் பாதுகாப்பு கோளாறு - உடனடி அப்டேட் செய்யக் கோரும் சிஇஆர்டி
ஆப்பிள் நிறுவனத்தின் சஃபாரி பிரவுசரில் பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் அல்லது சிஇஆர்டி நிறுவனம் ஆப்பிள் பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அந்த வகையில் ஆப்பிள் சஃபாரி பிரவுசரில் பாதுகாப்பு பிழை ஏற்பட்டுள்ளது, இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க உடனடியாக சஃபாரி பிரவுசரை அப்டேட் செய்ய சிஇஆர்டி தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவுறுத்தல் CIAD-2020-0047 எனும் தலைப்பில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
சஃபாரி பிரவுசரின் கோளாறை அறிந்து கொள்ளும் ஹேக்கர்கள் அதற்கேற்ற வகையில் பிரத்யேக வலைதளத்தை உருவாக்கி பயனர்களை குறிவைக்கின்றனர் என சிஇஆர்டி தெரிவித்து இருக்கிறது.
எனினும், ஆப்பிள் இந்த பிழையை கண்டறிந்து சரிசெய்து விட்டது. சஃபாரி பிரவுசருக்கான அப்டேட் ஆப்பிள் நிறுவனத்தின் சப்போர்ட் வலைதளத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அப்டேட் மேக்ஒஎஸ் மோஜேவ் மற்றும் மேக்ஒஎஸ் ஹை சியரா வெர்ஷன்களில் கிடைக்கிறது.

