ரூ.19 விலையில் ஹாட்ஸ்பாட் வவுச்சர்கள் வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.19 விலையில் வைபை ஹாட்ஸ்பாட் வவுச்சர்களை வழங்குகிறது. #BSNL
ரூ.19 விலையில் ஹாட்ஸ்பாட் வவுச்சர்கள் வழங்கும் பி.எஸ்.என்.எல்.
Published on

இந்தியாவில் மொபைல் கெக்டிவிட்டி மற்றும் 4ஜி பரப்பளவு இதுவரை இல்லாத அளவு அதிகரித்து இருக்கும் நிலையில், அரசாங்கம் வைபை கனெக்டிவிட்டியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் விழாவில் மத்திய தொலைதொடர்பு மந்திரி மனோஜ் சின்கா 2019 ஆம் ஆண்டு இறுதியில் சுமார் பத்து லட்சம் வைபை ஹாட்ஸ்பாட்கள் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் என்றும் இதற்கென டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

அந்த வகையில் மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் முதற்கட்டமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. பி.எஸ்.என்.எல். வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பின் படி நாட்டின் முக்கிய நகரங்களில் வைபை ஹாட்ஸ்பாட் பயன்படுத்த புதிய வவுச்சர்களை அறிவித்துள்ளது.

இந்தியா முழுக்க 20 டெலிகாம் வட்டாரங்களில் சேவை வழங்கும் பி.எஸ்.என்.எல். தற்சமயம் தனது வாடிக்கையாளர்களுக்கு வைபை ஹாட்ஸ்பாட் வவுச்சர்களை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வைபை ஹாட்ஸ்பாட்களுக்கென நான்கு புதிய திட்டங்களை இதற்கென அறிவித்திருக்கிறது.

நான்கு புதிய திட்டங்களின் விலையும் ரூ.100-க்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றின் துவக்க விலை திட்டம் ரூ.19 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 2 ஜி.பி. டேட்டா இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இரண்டாவது திட்டம் ரூ.39 விலையில் ஏழு நாட்களுக்கு 7 ஜி.பி. டேட்டா வழங்குகிறது.

மூன்றாவது திட்டத்தின் விலை ரூ.59 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 15 ஜி.பி. டேட்டா 15 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. நான்காவது திட்டத்தில் ரூ.69 கட்டணத்தில் 28 நாட்களுக்கு 30 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. அனைத்து திட்டங்களுக்கான கட்டணமும் சேவை வரியுடன் சேர்த்தது தான் என பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. பயனர்கள் இந்த சலுகையை ஆன்லைனிலேயே தேர்வு செய்து கட்டணத்தை கிரெடிட், டெபிட் கார்டு அல்லது நெட்பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com