

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், இந்தியா தனது ஆறாவது பதக்கத்தை வென்றது.
இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற மகளிர் 58 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில் அனுபவம் வாய்ந்த இந்திய பளுதூக்கும் வீராங்கனை பிந்த்யாராணி தேவி வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.
பிந்த்யாராணி 'ஸ்னாட்ச்' (snatch) பிரிவில் 87 கிலோவையும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' (clean and jerk) பிரிவில் 112 கிலோவையும் தூக்கி, மொத்தம் 199 கிலோ எடையை உயர்த்தினார்.
ஸ்னாட்ச் பிரிவில் 83 கிலோவுடன் தனது முயற்சியை தொடங்கிய பிந்த்யாராணி, இரண்டாவது முயற்சியில் 85 கிலோவையும், மூன்றாவது முயற்சியில் 87 கிலோவையும் வெற்றிகரமாக உயர்த்தினார்.
நைஜீரியாவின் ரஃபியாத்து ஃபோலாஷாடே மொத்தம் 229 கிலோ எடையை உயர்த்தி (இது ஒரு போட்டி சாதனையாகும்) தங்க பதக்கத்தை வென்றார். கனடாவின் ஆன் சோஃபி டாஷெரோ மொத்தம் 215 கிலோ எடையை உயர்த்தி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.
பிந்த்யாராணி ஏற்கனவே 2022-இல் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். மேலும் கடந்த ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்திருந்தார்.
நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில், பளுதூக்குதலில் இந்தியா வென்ற ஐந்தாவது பதக்கமும், ஒட்டுமொத்தமாக ஆறாவது பதக்கமும் இதுவாகும்.