

போலியோ, வறுமை மற்றும் பல வருடங்களாக செய்த பல்வகை வேலைகள் நிறைந்த குழந்தை பருவத்தை கடந்து, இந்தியாவின் ஜண்டு குமார், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று அசத்தினார். இதன் மூலம் அவர் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தார்.
28 வயதான இவர், 181 கிலோ மற்றும் 190 கிலோ எடைகளை வெற்றிகரமாக தூக்கி, 130.9 புள்ளிகளை பெற்று பதக்க மேடையில் இடம்பிடித்தார். 196 கிலோ எடைப் பிரிவில் தனது இறுதி முயற்சியில் அவர் தோல்வியடைந்தார். இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான சுதிர் (114.1), ஆறாவது இடத்தை பிடித்தார். நைஜீரியாவின் இட்ரிஸ் ரிலுவான் 132.8 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், மேத்யூ ஹார்டிங் (131) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
ஐந்து வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட குமார், பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஹர்னாட் கிராமத்தில், குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தன் பெற்றோருடன் காய்கறிகள் விற்க உதவினார். அந்த சூழலில் இருந்து அவர் அடைந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு அவரது இந்த வெற்றி மகுடம் சூட்டியது.
குறைந்த நிதி ஆதரவுடன், குமார் ஆரம்பத்தில் 2010 முதல் 2012 வரை, குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் முயற்சி செய்வதற்கு முன்பு, வலிமையை அதிகரிப்பதற்காக மட்டுமே பளு தூக்கும் பயிற்சியை மேற்கொண்டார். இறுதியில், அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான பளுதூக்குதலில் தனது உண்மையான திறமையைக் கண்டறிந்தார்.
இருப்பினும், மிகப்பெரிய தடை உடற்பயிற்சிக் கூடத்திற்கு வெளியேதான் வந்தது. உயர்மட்டப் போட்டிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வாங்க வசதியில்லாத குமார், சக்கர நாற்காலி சொந்தமாக இல்லாதபோதிலும், உள்ளூர் சந்தைகளுக்குச் செல்ல கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் பயணம் செய்து ஒரு சிறிய காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
பின்னர், பிழைப்புக்காக நண்பர்களிடம் கடன் வாங்கி ஒரு மின்சார ஆட்டோவை வாங்கினார், ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று அந்தத் திட்டங்களைச் சீர்குலைத்தது.
அவரது விடாமுயற்சிக்கு இறுதியில் பலன் கிடைத்தது. அவர் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்க மேடையில் ஏறி, மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு திட்டத்தில் இந்தியாவிற்கு ஒரு உத்வேகத்தை அளித்தார்.
முன்னதாக, ஆடவர் இலகு எடைப் பிரிவில் அசோக் மாலிக் 143.8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்து, பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டார்.
இந்தியாவின் பரம்ஜீத் குமார் 135.6 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தை பிடித்தார்.
மகளிர் ஹெவிவெயிட் இறுதிப் போட்டியில், கஸ்தூரி ராஜாமணி தனது மூன்று முயற்சிகளிலும் தோல்வியடைந்தார்.
மகளிர் லைட்வெயிட் இறுதிப் போட்டியில், ஜஸ்பிரீத் கவுர் மற்றும் சுமன் தேவி பதக்கங்களை வெல்ல தவறினர்.