2029-ம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பை இந்தியாவில் நடத்த திட்டம்- அஞ்சு ஜார்ஜ் தகவல்

இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அமிர்தசரசில் நடந்தது. கூட்டத்தில் அஞ்சு ஜார்ஜ், சம்மேளன தலைவர் அடில் சுமரிவாலா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
2029-ம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பை இந்தியாவில் நடத்த திட்டம்- அஞ்சு ஜார்ஜ் தகவல்
Published on

புதுடெல்லி:

இந்திய தடகள சம்மேளனம், 2027-ம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான உரிமத்தை பெற முதலில் திட்டமிட்டது. தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் செய்துள்ள தடகள சம்மேளனம் 2029-ம்ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு உரிமம் கோருவது என்று முடிவு செய்திருக்கிறது.

இந்த தகவலை தெரிவித்த இந்திய தடகள சம்மேளனத்தின் துணைத் தலைவர் அஞ்சு பாபி ஜார்ஜ் கூறுகையில், '2036-ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் 2030-ம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக்கை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 2029-ம் ஆண்டில் உலக தடகள சாம்பியன்ஷிப்பை நாம் நடத்தினால் இன்னும் மிகச்சிறப்பாக இருக்கும். அதற்கான வாய்ப்பை பெற ஆர்வமாக இருக்கிறோம்' என்றார்.

இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அமிர்தசரசில் நடந்தது. கூட்டத்தில் அஞ்சு ஜார்ஜ், சம்மேளன தலைவர் அடில் சுமரிவாலா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு முன்னணி வீரர், வீராங்கனைகளுக்கு நடத்தப்படும் தேசிய தடகள பயிற்சி முகாமை நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சாய், ரிலையன்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ. டாட்டா மற்றும் இதர நிறுவனங்களில் தடகள வீரர்களின் பயிற்சிக்கு ஏராளமான வசதி வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் வெளிநாட்டு பயிற்சியாளர்களையும் நியமித்துள்ளனர். அங்கு வீரர்கள் தங்கள் பயிற்சியை தொடரலாம். இதே போல் ரெயில்வே, விமானப்படை, கடற்படை, ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட மற்ற பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள விளையாட்டு பயிற்சி மையங்களையும் பயன்படுத்தி கொள்ள முடியும். அத்துடன் மாநில அரசு கூட தங்களது வீரர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்று தடகள சம்மேளனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com