ஓய்வு முடிவை அறிவிக்க காரணம் என்ன?: சுனில் சேத்ரி விளக்கம்

என்னுடைய ஓய்வு முடிவு உடல் சார்ந்த அம்சங்கள் காரணமாக வரவில்லை.நான் இன்னும் கட்டுக்கோப்பாக இருக்கிறேன். நன்றாக ஓடுகிறேன்.
ஓய்வு முடிவை அறிவிக்க காரணம் என்ன?: சுனில் சேத்ரி விளக்கம்
Published on

இந்திய கால்பந்து அணியின் ஜாம்பவானாக சுனில் சேத்ரி விளங்கி வருகிறார். இவர் திடீரென நேற்று சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது இந்திய கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

39 வயதான இவர் இந்திய அணிக்காக 19 வருடங்கள் விளையாடி 150 போட்டிகளில் 94 கோல்கள் அடித்துள்ளார். இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரரும் ஆவார். ஜூன் 6-ந்தேதி இந்திய அணி குவைத் அணிக்கெதிராக விளையாடுகிறது. இதுதான் அவருடைய கடைசி போட்டியாகும்.

இந்த நிலையில் ஓய்வு முடிவை எடுத்தது குறித்து சுனில் சேத்ரி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

என்னுடைய ஓய்வு முடிவு உடல் சார்ந்த அம்சங்கள் காரணமாக வரவில்லை. நான் இன்னும் கட்டுக்கோப்பாக இருக்கிறேன். நன்றாக ஓடுகிறேன். கடினமாக பயிற்சி மேற்கொள்வதில் எந்த கஷ்டமும் இல்லை. இந்த முடிவு மனநிலை அம்சங்கள் தொடர்பாக வந்தது.

ஓய்வு முடிவு உள்ளுணர்வாக வந்தது. ஒரு வருடம் பெங்களூரு எஃப்சி அணிக்காக விளையாடுவேன். அதன்பின் எவ்வளவு காலம் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன் என்பது எனக்குத் தெரியாது. அதன்பின் ஓய்வு எடுக்க விரும்புகிறேன்.

பயிற்சியாளராக ஆவது குறித்து நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். அது குறித்து எனது ஓய்வு காலத்தில் யோசிப்பேன். தற்போது என்னுடைய எண்ணத்தில் அது இல்லை.

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளரை தவிர்த்து, விராட் கோலியிடம் எனது ஓய்வு குறித்து தெரிவித்தேன். அவர் எனக்கு மிகவம் நெருக்கமானவர். அவர் என்னை புரிந்து கொள்கிறார்.

இவ்வாறு சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com