

உலகளவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை கால்பந்து தொடர் கோலாகலமாக தொடங்கியது. உலகின் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு தொடராக உலகக்கோப்பை கால்பந்து தொடர் விளங்குகிறது. இந்தத் தொடர் மொத்தம் 12 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 48 அணிகள் பங்கேற்று களம் காண்கின்றன.
கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய உலகக்கோப்பை கால்பந்து தொடர் மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடைபெறுகிறது. மெக்சிகோ நகரில் பிரமாண்ட துவக்க விழாவுடன் தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து தொடரின் மதல் போட்டியில் மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கிய 9வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஜுலியன் அண்ட்ரே குவானிஸ் கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் ரவுல் ஜெமிஸ் மெக்சிகோ அணிக்காக கோல் அடிக்க, தென் ஆப்பிரிக்க வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. தென் ஆப்பிரிக்காவின் கோல் முயற்சிகள் அனைத்தையம் மெக்சிகோ வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினர்.
போட்டி இறுதிவரை மெக்சிகோ வீரர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், தென் ஆப்பிரிக்கா அணியினர் ஒரு கோல் கூட அடிக்க முடியாத சூழலே நிலவியது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது.
மெக்சிகோ நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் முதல் போட்டியில் 2-0 என்ற கணக்கில் மெக்சிகோ அணி வெற்றி பெற்று அசத்தியது. உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 2வது லீக் போட்டியில் தென்கொரியா மற்றும் செக் குடியரசு அணிகள் களம் காண்கின்றன. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று (ஜூன் 12) காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.