

புனே:
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் - மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 216 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 18.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் 16 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். போட்டி முடிந்த பிறகு அவருக்குத் திடீரென கடுமையான வயிற்றுப் பிடிப்பு மற்றும் வலி ஏற்பட்டது. வலி அதிகமானதால், உடனடியாக அவர் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவசர அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்ததில், அவருக்குத் தீவிரமான இரைப்பை குடல் அழற்சி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
சிகிச்சைக்குப் பிறகு, அவர் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொண்டு முழு ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.