

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவர் ககிசோ ரபாடா. இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பினார்.
இந்த நிலையில், போதைப் பொருள் பயன்படுத்தியன் காரணமாக தனக்கு அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் தனது செயலுக்காக வருந்துவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் ரபாடா ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை எனவும், இது தொடர்பான முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது மிகவும் கேவலமானது. தனிப்பட்ட காரணங்கள் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு விஷயத்தை மறைப்பதற்காக முயற்சி செய்வது தனிப்பட்ட பிரச்னை கிடையாது. நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருக்கிறீர்கள். ஒரு தொடரின்போது, ஊக்கமருந்து விவகாரத்தில் உங்களுக்கு தடை விதிக்கப்பட்டால், அதனை தனிப்பட்ட பிரச்னை எனக் கூற மாட்டேன். நீங்கள் உங்களது ஒப்பந்தத்தை மீறியுள்ளீர்கள் என்றே கூறுவேன். இது தனிப்பட்ட பிரச்னை கிடையாது.
ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதால் தடை விதிக்கப்பட்டது என்றால், அவர் என்ன மாதிரியான ஊக்கமருந்து எடுத்துக் கொண்டார். எப்போது அவருக்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கு எவ்வாறு ஊக்கமருந்து கிடைத்தது. ஊக்கமருந்து வழங்கியவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பதில் வெளிப்படை தன்மை வேண்டும்.
என டிம் பெய்ன் கூறினார்.