இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி... சஞ்சு சாம்சனை பாராட்டிய பினராயி விஜயன் #sanjusamson

இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி... சஞ்சு சாம்சனை பாராட்டிய பினராயி விஜயன் #sanjusamson

சஞ்சு சாம்சன் இந்த தொடரில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார்.சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார்
Published on

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3 ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 89 ரன்கள் விளாசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்த தொடரில் தொடக்கத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியிலும், அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து மூன்று அரைசதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன் இந்த தொடரில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்து தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார்.

சஞ்சு சாம்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தால் தான் இந்தியா கோப்பையை கைப்பற்றியது என்று சொன்னால் அது மிகையாகாது. அவ்வகையில் சஞ்சு சாம்சனின் மறக்கமுடியாத இந்த உலகக்கோப்பை ஆட்டத்தை பாராட்டி கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பினராயி விஜயன் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய அணிக்கு ஒரு வரலாற்று வெற்றி. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் அற்புதமான வெற்றி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் மிகுந்த பெருமை சேர்க்கும் தருணம்.

டி20 உலகக்கோப்பை தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்ட சஞ்சுசாம்சனுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். நீங்கள் கேரளாவையும் முழு இந்தியாவையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி" என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com