சூர்யகுமாரை இந்த வரிசையில் களமிறக்கினால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் - லாரா கருத்து

டி20 கிரிக்கெட்டில் மகத்தான வீரர்களில் சூர்யகுமார் யாதவ் ஒருவர்.10 - 15 ஓவர்கள் வரை அவர் பேட்டிங் செய்தால் போட்டி எப்படி மாறும் என்பது உங்களுக்கு தெரியும்.
சூர்யகுமாரை இந்த வரிசையில் களமிறக்கினால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் - லாரா கருத்து
Published on

மும்பை:

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து வருகின்றன.

ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன், அமெரிக்கா, உகாண்டா, ஸ்காட்லாந்து போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.

உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் சுமார் 20 நாட்களே உள்ள நிலையில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள், அணிகளின் ஆடும் லெவனில் இடம் பெறக்கூடிய வீரர்கள் குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா இந்திய அணியின் 3-வது வரிசையில் விராட் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறங்குவது இந்தியாவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நீங்கள் விரும்புவீர்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் என்னுடைய ஒரு ஆலோசனை என்னவெனில் சூர்யகுமார் 3-வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். அவர் டி20 கிரிக்கெட்டில் மகத்தான வீரர்களில் ஒருவர். விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்களிடம் பேசும் போது அவர் முன்கூட்டியே களத்தில் விளையாடுவதை விரும்புவதாக சொல்வார்.

சூர்யகுமார் விஷயத்திலும் நானும் அதையே உணர்கிறேன். அவரை முடிந்தளவுக்கு முன்கூட்டியே களமிறக்க முயற்சிக்க வேண்டும். அவர் துவக்க வீரர் கிடையாது. எனவே முன்கூட்டியே களமிறங்கி 10 - 15 ஓவர்கள் வரை அவர் பேட்டிங் செய்தால் போட்டி எப்படி மாறும் என்பது உங்களுக்கு தெரியும்.

நீங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது சேசிங் செய்தாலும் கொஞ்சம் முன்கூட்டியே களமிறங்கினால் அவர் உங்களை அசைக்க முடியாத நிலைக்கு எடுத்துச் செல்வார். அது மற்றவர்கள் தங்களுடைய இடத்தில் சிறப்பாக விளையாடுவதற்கான வாய்ப்பை கொடுக்கும். எனவே அவரை 3வது இடத்தில் விளையாட வைப்பதற்கான வழியை கண்டறியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com