தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் எனது 4-வது இடம் ஆபத்தில் இருக்கிறது- நகைத்த சூர்ய குமார் யாதவ்

நான் தினேஷ் கார்த்திக் உடன் மிகப்பெரிய பாட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன். இனி வரும் போட்டிகளிலும் எனது சிறப்பான ஆட்டத்தை தொடருவதில் மட்டுமே எனது எண்ணம் இருக்கும்
தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் எனது 4-வது இடம் ஆபத்தில் இருக்கிறது- நகைத்த சூர்ய குமார் யாதவ்
Published on

இந்திய - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. நேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் 4-வது இடத்தில் களமிறங்க என்ன காரணம் என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

நான் எப்பொழுதுமே புள்ளி விவரங்களை பற்றி யோசிப்பது கிடையாது. போட்டிக்கு என்ன தேவையோ அதைப்பற்றி மட்டுமே தான் யோசிப்பேன். ஆனால் எனது நண்பர்கள் எனக்கு வாட்ஸ் அப் மூலம் என்னுடைய புள்ளி விவரங்களையும், சாதனைகளையும் அனுப்புவார்கள். ஆனால் அதை எல்லாம் நான் பெருசாக எடுத்துக் கொள்வதில்லை.

என்னுடைய ஆட்டத்தில் மட்டும் கவனத்தை செலுத்தி வருகிறேன். நான் எவ்வாறு விளையாட வேண்டும் என்று நினைக்கிறேனோ அதனை மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன். நான் தினேஷ் கார்த்திக் உடன் மிகப்பெரிய பாட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது முடியாமல் போனது. இந்த போட்டியில் எனக்கு முன்னால் தினேஷ் கார்த்திக் களமிறங்க காரணம், அவருக்கு இன்னும் பேட்டிங் செய்ய நிறைய நேரம் கொடுக்க வேண்டும் என நினைத்தோம்.

அதன்படி அவர் முன்கூட்டியே களமிறங்கினால் அவர் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாட முடியும் என்பதனாலே அவருக்கு விளையாட ஒரு வாய்ப்பாக இந்த பிரமோஷன் வழங்கப்பட்டது. அவரும் நான்காவது இடத்தில் பிரமாதமாக விளையாடினார். தற்போது என்னுடைய இடம் ஆபத்தில் இருப்பதாக நினைக்கிறேன். ஆனாலும் அதைப்பற்றி நான் யோசிக்க போவதில்லை. இனி வரும் போட்டிகளிலும் எனது சிறப்பான ஆட்டத்தை தொடருவதில் மட்டுமே எனது எண்ணம் இருக்கும்

இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com