

ஐதராபாத்:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 66 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சாம் கர்ரன் 22 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியில், பஞ்சாப் அணி 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் விளையாடுகிறது.
ஐதராபாத் சார்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டும், உம்ரான் மாலிக், ஜேன்சன், ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.