கேப்டன் பதவிக்கு அவர் சரிப்பட்டு வரமாட்டார்: சாகிப் அல் ஹசனை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்

லிட்டோன் தாஸ் கேப்டன் பதவிக்கு சிறந்த தேர்வாக இருப்பார்.சாகிப் அல் ஹசன் பெரிய வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால், அவர் கேப்டனுக்கான நபர் இல்லை.
கேப்டன் பதவிக்கு அவர் சரிப்பட்டு வரமாட்டார்: சாகிப் அல் ஹசனை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்
Published on

இந்தியா- வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 404 ரன்கள் குவித்தது. வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது.

முதல்நாள் முதல் செசனில் மட்டும் வங்காளதேசம் சற்று ஆதிக்கம் செலுத்தியது. அதன்பின் இந்திய அணி ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்சில் புஜாரா, ஷ்ரேயாஸ் அய்யர், அஸ்வின் ஆகியோர் அரைசதம் விளாசினர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட் சாய்த்தார்.

இந்த நிலையில், வங்காளதேச கேப்டன் சாகிப் அல் ஹசன், கேப்டனுக்குரிய நபர் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஸ் கனேரியா விமர்சனம் செய்துள்ளார்.

டேனிஸ் கனேரியா கூறுகையில் ''லேசான காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் எபாடத் ஹொசைன் வெளியேறினார். எனினும், அதன்பின் களத்திற்குள் இறங்கிய அவருக்கு போதுமான அளவு பந்து வீசும் வாய்ப்பை சாகிப் அல் ஹசன் வழங்கவில்லை. மேலும், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் கலித் அகமதுவை அவர் பயன்படுத்தவில்லை. அவருடைய கேப்டன்ஷிப் உயர்ந்த தரமாக இல்லை. வங்காளதேச வீரர்கள் அவரின் கேப்டன் பதவியின் கீழ் செயல்பட விரும்பவில்லை.

லிட்டோன் தாஸ் சிறந்த தேர்வாக இருப்பார். அவர் ஒருநாள் தொடரை எப்படி வென்றாடுத்தார் என்பதை நாம் பார்த்தோம். சாகிப் அல் ஹசன் பெரிய வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால், அவர் கேப்டனுக்கான நபர் இல்லை.

சட்டோகிராம் ஆடுகளம் வங்காள தேசத்தின் மற்ற ஆடுகளங்களை விட சற்று மாறுபட்டதாக உள்ளது. இங்கு வேகப்பந்து வீச்சு சற்று அதிகமாக எடுபடுகிறது. அவர் காயம் ஏற்பட்டிருப்பதால், அவர் பந்து வீசுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது. அவர் காயத்துடன் கட்டாயம் விளையாட வேண்டியது அவசியமா?. அவர்கள் இன்னும் ஒரு பந்து வீச்சாளருடன் களம் இறங்கியிருக்கனும்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com