

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாராவுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுத்ததால், அவரால் ஐ.பி.எல். அணியில் இணைய முடியவில்லை.
கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்த உயரிய உடல்தகுதி சோதனையில் அவர் தேறவில்லை. அதனால் அவருக்கு சான்றிதழ் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை எதிர்த்து துஷாரா, கொழும்பு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் 'இலங்கை கிரிக்கெட் வாரியத்துடனான எனது ஒப்பந்தம் மார்ச் 31-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டாம் என்றும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்க விரும்புவதாகவும் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளேன்.
எனவே தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு வருகிற 9-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. 31 வயதான துஷாரா, இலங்கை அணிக்காக 30 இருபது ஓவர் போட்டியில் ஆடி 36 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அவரை பெங்களூரு அணி 2024-ம் ஆண்டு கடைசியில் நடந்த ஏலத்தில் ரூ.1.60 கோடிக்கு வாங்கியிருந்தது.