

19 வயது உட்பட்டவருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று அரை இறுதி போட்டி நடைபெறுகிறது. இன்றைய அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 5 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதனையடுத்து ஜார்ஜியா ப்ளிம்மர் - இசபெல்லா ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இசபெல்லா 26 ரன்னில் பார்ஷவி சோப்ரா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்த வந்த கேப்டன் இஸி ஷார்ப் 13 ரன்னிலும் நிதானமாக விளையாடி வந்த ஜார்ஜியா 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் பார்ஷவி சோப்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.