

விசாகப்பட்டினம்:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 116 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். தனது 4-வது ஒருநாள் போட்டியில் அவர் முதல் சதத்தை பதிவு செய்தார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் மனம் தளராமல் தனது செயல்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தினார்.
ஒருநாள் போட்டியில் தனது முதல் சதம் தொடர்பாக ஜெய்ஸ்வால் கூறியதாவது:-
டெஸ்ட், 20 ஓவர் போட்டிகளில் ஏற்கனவே சதம் அடித்துள்ளேன். தற்போது ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் இடம் பெறுவது எல்லாமே தேர்வுக்குழு கையில் இருக்கிறது. ஆட்டத்திறன், அணிக்கான தேவை ஆகியவை தொடர்பாக வீரர்கள் தேர்வு இருக்கும்.
எனக்கான நேரம் எப்போது வரும் என்று தெரியும். அதுவரை எனது ஆட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.
இவ்வாறு ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.