பட்லர் இல்லாதது குறித்து கவலைப்படவில்லை: குஜராத் அணி பயிற்சியாளர் சொல்கிறார்

பிளேஆஃப் போட்டிகளில் பட்லர் விளையாடமாட்டார்.மிடில் ஆர்ட்ர் பேட்ஸ்மேன்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
பட்லர் இல்லாதது குறித்து கவலைப்படவில்லை: குஜராத் அணி பயிற்சியாளர் சொல்கிறார்
Published on

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இடையில் நிறுத்தப்பட்டது. எஞ்சிய போட்டிகள் 10 நாட்கள் கழித்து நடத்தப்பட்டு வருகிறது. இதனால் முந்தைய போட்டி அட்டவணையை விட நாட்கள் அதிகமாகியுள்ளன.

இதன் காரணமாக பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியில் ஜாஸ் பட்லர் இடம் பிடித்துள்ளார். இவர் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அணி கவலைப்படவில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேத்யூ வேட் கூறுகையில் "நாங்கள் நிச்சயமாக கவலைப்படவில்லை. ஏற்கனவே கில், சாய் சுதர்சன் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அணியில் உள்ள வீரர்கள் வாய்ப்பு கிடைக்கும்போது, அபாரமான ஃபார்மில் இருக்கும் அவர்கள், அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

முதல் மூன்று இடங்களில் களம் இறங்கும் வீரர்கள் மெஜாரிட்டியான ரன்களை அடிக்கும்போது சிறப்பானதாக இருக்கும். பட்லர் சென்ற பிறகு, 3ஆவது இடத்தில் களம் இறங்க மற்றொருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அப்படி வாய்ப்பு கிடைக்கும் வீரர்கள் களம் இறங்கி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என நிச்சயமாக நம்புகிறேன்.

பாசிட்டிவ் விசயம் என்னவென்றால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். ரூதர்போர்டு ஷெர்ஃபேன், ஷாருக்கான், ராகுல் டெவாட்டியா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com