

ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. நிதிஷ்குமார் ரெட்டி 31 ரன்னும், கிளாசன் 27 ரன்னும், கம்மின்ஸ் 22 ரன்னும் எடுத்தனர்.
குஜராத் சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. சுப்மன் கில் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 61 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 49 ரன்னில் அவுட்டானார்.
ரதர்போர்டு 16 பந்தில் 35 ரன்கள் குவித்தார்.
இறுதியில், குஜராத் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 3வது வெற்றியைப் பதிவு செய்தது. நடப்பு தொடரில் ஐதராபாத் அணி பெறும் 4வது தோல்வி இதுவாகும்.