

கொல்கத்தா:
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா- குஜராத் அணிகள் மோதி வருகின்றனர். இதில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் குஜராத் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் 8 இன்னிங்ஸில் 5 அரை சதம் அடித்துள்ளார்.
நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் சாய் சுதர்சனுக்கு ஆரஞ்சு நிற தொப்பி கிடைத்திருக்கிறது.
லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரான் 368 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாய் சுதர்சனிடம் கடந்த போட்டியில் இருந்து ஆரஞ்சு நிற தொப்பியை வாங்கி இருந்தார். தற்போது சாய் சுதர்சன் மீண்டும் ஒரு அரை சதம் அடித்து நிக்கோலஸ் பூரானிடம் இருந்து ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் படுத்தியுள்ளார். தற்போது இருவருக்கும் இடையே 49 ரன்கள் வித்தியாசம் இருக்கின்றது.