136 ஆண்டுக்கு பிறகு இதுதான் முதல் முறை- இங்கிலாந்தின் அரிதான சம்பவம்

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
136 ஆண்டுக்கு பிறகு இதுதான் முதல் முறை- இங்கிலாந்தின் அரிதான சம்பவம்
Published on

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆடும் லெவனில் ஒரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி உள்ளது.மார்க்வுட் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர். டாம் ஹார்ட்லீ, ஜாக் லீச், ரெஹான் அகமது ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்கள். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வேகப்பந்து வீசக்கூடியவர் என்றாலும் அவர் கால்முட்டி காயத்துக்கு ஆபரேஷன் செய்திருப்பதால் இந்த போட்டியில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே தொடருகிறார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் மட்டும் களம் காணுவது அபூர்வ நிகழ்வாகும். இதற்கு முன்பு 1888-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் மட்டும் இவ்வாறு ஒரே வேகப்பந்து வீச்சாளரை பயன்படுத்தி இருந்தது.

தனிப்பட்ட விஷயம் காரணமாக இந்திய வீரர் விராட் கோலி இந்த டெஸ்டில் விளையாடவில்லை. மூத்த வீரர்கள் ரஹானே, புஜாரா ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரில் ஒருவர் கூட இல்லாமல் இந்தியா டெஸ்ட் ஆடுவது 2011ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com