நீண்ட நாள் தோழியை மணந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ்

நீண்ட நாள் தோழியை மணந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ்
Published on
Summary

குல்தீப் யாதவ்- வன்ஷிகா திருமணம் உத்தரகாண்ட் மாநிலம் முசோரி மலை பிரதேசத்தில் உள்ள ஐ.டி.சி. கவாய் ஓட்டலில் இன்று நடந்தது.

முசோரி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் குல்தீப் யாதவ். சமீபத்தில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

31 வயதான குல்தீப் யாதவ் தனது நீண்ட நாள் தோழி வன்ஷிகாவை காதலித்து வந்தார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூன் 4-ந் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில் குல்தீப் யாதவ்- வன்ஷிகா திருமணம் உத்தரகாண்ட் மாநிலம் முசோரி மலை பிரதேசத்தில் உள்ள ஐ.டி.சி. கவாய் ஓட்டலில் இன்று நடந்தது. திருமண சடங்கு நிகழ்ச்சிகள் மாலை 6 மணிக்கு தொடங்கியது. இருவரும் திருமணத்திற்கான 7 உறுதிமொழிகளை எடுத்தார்கள்.

திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

குல்தீப் யாதவ்-வன்ஷிகா இடையேயான மஞ்சள் பூசும் மற்றும் மெகந்தி நிகழ்ச்சி (மருதாணி) நேற்று நடைபெற்றது.

இதில் கிரிக்கெட் வீரர்கள், குடும்ப நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். ரிங்கு சிங் தனது வருங்கால மனைவியும், எம்.பி.யுமான பிரியா சரோஜ்யுடன் பங்கேற்றார். யசுவேந்திர சாஹல், சுரேஷ் ரெய்னா, நிதிஷ் ராணா, இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திலீப், பாடகர் கைலாஷ் கெர், நடிகர் குணால் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குல்தீப் யாதவ்-வன்ஷிகா திருமண வரவேற்பு வருகிற 17-ந்தேதி லக்னோவில் நடக்கிறது. இதில் விராட்கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இவர்கள் திருமணம் கடந்த நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. குல்தீப் யாதவ் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றதால் திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டது. இன்று இருவரது திருமண விழா கோலாகலமாக நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com