

துபாய்:
இந்திய அணி மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு பிசிசிஐ சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டுக்கான விருதுகள் மார்ச் 15-ம் தேதி புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.
நமன் விருதுகள் எனப் பெரியடப்பட்டுள்ள இந்த நிகழ்வில் இந்திய அணிக்காக 5 ஐசிசி கோப்பைகளை வென்ற அணி வீரர்களும் கவுரவிக்கப்படவுள்ளனர். சிறப்பாக விளையாடி வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இந்நிலையில், சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வுக்கு பின் இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பு சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. அவரின் தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி தொடரை சமன் செய்த இந்திய அணி கேப்டன் கில், 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு இரட்டை சதம் உள்பட 754 ரன்கள் குவித்து மொத்தமாக 983 ரன்கள் குவித்திருந்தார்.
சாம்பியன்ஸ் டிராபியில் 188 ரன்கள் உள்பட மொத்தமாக 490 ரன்கள் குவித்திருந்தார். ஒரே ஆண்டில் 7 சதம், 3 அரைசதத்துடன் 1,764 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். ஐ.பி.எல். போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 650 ரன்கள் குவித்து அசத்தினார்.
சர்வதேச டி20 போட்டிகளில் சரியாக விளையாடாததால் துணை கேப்டனான சுப்மன் கில் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.