

அனந்தபூர்:
ஆந்திராவின் அனந்தபூரில், துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா பி, இந்தியா டி அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பி அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்தியா டி அணியின் தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், ரிக்கி புய் ஆகியோர் அரை சதம் அடித்தனர். முதல் நாள் முடிவில் இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 306 ரன் எடுத்திருந்தது. சாம்சன் 89 ரன்னும், சரண்ஷ் ஜெயின் 26 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து பேட் செய்த இந்திய டி அணி மேற்கொண்டு 43 ரன்களுக்குள் எஞ்சிய விக்கெட்டை இழந்து 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 101 பந்தில் 106 ரன் குவித்தார்.
இந்தியா பி தரப்பில் நவ்தீப் சைனி 5 விக்கெட்டும், ராகுல் சஹார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா பி அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் அடித்துள்ளது. அபிமன்யு ஈஸ்வரன் சதம் அடித்தார்.
இந்தியா டி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
மற்றொரு லீக் போட்டியில் இந்தியா ஏ, இந்தியா சி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா சி அணி பவுலிங்'தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் இந்தியா ஏ அணி களமிறங்கியது. அந்த அணியின் ஷஷ்வத் ராவத் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
ஷாம்ஸ் முலானி 44 ரன்கள் எடுத்தார்.
முதல் நாள் முடிவில் இந்தியா ஏ அணி 7 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. ஷஷ்வத் ராவத்122 ரன்னும், ஆவேஷ் கான் 16 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷஷ்வாத் 124 ரன்னில் அவுட்டானார். ஆவேஷ் கான் அரை சதம் கடந்தார்.
இந்தியா சி சார்பில் விஜயகுமார் 4 விக்கெட்டும், அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டும், விஜயகுமார் விஷாக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்தியா சி அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அபிஷேக் பரோல் அரை சதம் கடந்து 82 ரன் எடுத்தார். புல்கிட் நாரங் 35 ரன்னும், பாபா இந்திரஜித் 34 ரன்னும் எடுத்தனர்.
இரண்டாம் நாள் முடிவில் இந்தியா சி அணி 7 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்துள்ளது.