இறுதிப் போட்டி, 2-வது அரையிறுதி நடைபெற்ற ஆடுகளங்கள் சராசரியானது: ஐசிசி

தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது அரையிறுதி கொல்கத்தாவில் நடைபெற்றது.இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.
இறுதிப் போட்டி, 2-வது அரையிறுதி நடைபெற்ற ஆடுகளங்கள் சராசரியானது: ஐசிசி
Published on

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 2-வது அரையிறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

2-வது அரையிறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 212 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா 47.2 ஓவரில் 217 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டம் நடைபெற்ற ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. மேலும் மந்தமாக இருந்தது. ரன்கள் அடிக்க மிகவும் சிரமமாக இருந்தது. லீக் ஆட்டங்களில் எல்லாம் ரன்கள் குவிக்கும் வகையில் ஆடுகளம் தயார் செய்துவிட்டு, முக்கிய அரையிறுதிக்கு ஆட்டத்திற்கு இப்படி ஆடுகளம் தயார் செய்யலாமா? என விமர்சிக்கப்பட்டது.

அதேபோல் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி ஆடுகளமும் மோசமாக இருந்தது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததும் இந்தியா முதலில் பேட்டிங் செய்த அதிக ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்லோ பிட்ச் என்பதால் பந்து சரியாக பேட்டிற்கு வரவில்லை. இதனால் ரன்கள் எடுப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் இந்தியா 240 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. இரவு நேரத்தில் லைட் ஒளியின் கீழ் ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகச் சிறந்த அளவில் ஒத்துழைத்தது. 47 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அதன்பின் சிறப்பாக விளையாடினார்கள்.

முதல் 10 ஓவருக்குப்பின் பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. பந்து டர்ன் ஆகவில்லை. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களால் ஜொலிக்க முடியவில்லை.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பிசிசிஐ தோல்விக்கான காரணம் குறித்து அறிக்கை கேட்ட நிலையில், ஆடுகளம் எதிர்பார்த்த அளவில் சுழற்பந்து திரும்புவதற்கு ஒத்துழைக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான் 2-வது அரையிறுதி , இறுதிப் போட்டி நடைபெற்ற ஆடுகளங்கள் சாரசரி என ஐசிசி மதிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com