

காபூல்:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு முறை சூப்பர் ஓவரில் போராடி தோற்றது கவனிக்கத்தக்க ஒரு ஆட்டமாக இருந்தது.
இந்த நிலையில் தோல்வி எதிரொலியாக ரஷித் கானை கேப்டன் பதவியில் இருந்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அதிரடியாக நீக்கியது. அவருக்கு பதிலாக தொடக்க வரிசை பேட்ஸ்மேன் இப்ராகிம் ஜட்ரன் 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஒரு வீரராக ரஷித் கான் அணியில் நீடிக்கிறார். ஒருநாள் அணியின் கேப்டனாக ஹஷ்மத்துலா ஷகிடி தொடருகிறார்.
ஆப்கானிஸ்தான் அணி விரைவில் இலங்கைக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. ஆப்கானிஸ்தான்- இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 13-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் நடக்கிறது. ஆனால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவுவதால் இந்த தொடர் தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளது.