தேசிய அணிக்காக விளையாட தடை: ஐபிஎல் தொடரில் விளையாடவிருக்கும் ஹசரங்கா

வங்காளதேசம் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியில் ஹசரங்கா இடம் பெற்றிருந்தார். நடுவரை கேலி செய்ததால் அவருக்கு 2 டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
தேசிய அணிக்காக விளையாட தடை: ஐபிஎல் தொடரில் விளையாடவிருக்கும் ஹசரங்கா
Published on

கொழும்பு:

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கையும் ஒருநாள் தொடரை வங்காளதேசமும் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இலங்கை அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் கடந்த வருடம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஹசரங்கா இடம்பெற்றிருந்தார்.

இந்த நிலையில் ஹசரங்காவுக்கு 2 டெஸ்டில் விளையாட ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது. சமீபத்தில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது நடுவரிடம், தான் கொடுத்து வைத்திருந்த தொப்பியை பிடுங்கியதுடன், அவரை கேலியும் செய்தார். இது வீரர்களின் நடத்தை விதியை மீறிய செயலாகும்.

இதையடுத்து அவருக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமும், 3 தகுதி இழப்பு புள்ளிகளும் விதிக்கப்பட்டன. ஏற்கனவே 5 தகுதி இழப்பு புள்ளிகளை பெற்றிருந்த ஹசரங்காவுக்கு அந்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. 8 தகுதி இழப்பு புள்ளி என்பது 4 இடைநீக்க புள்ளியாக எடுத்துக் கொள்ளப்படும்.

4 இடைநீக்க புள்ளி என்பது 2 டெஸ்ட் அல்லது 4 ஒரு நாள் அல்லது நான்கு 20 ஓவர் போட்டிக்கு தடை விதிப்பதற்கு சமமானது. அவருக்கு எந்த போட்டி முதலில் வருகிறதோ அதற்கு தடை விதிக்கப்படும். அந்த வகையில் முதலில் வங்காளதேசத்துக்கான இரு டெஸ்ட் நடக்க இருப்பதால் அவர் அதில் விளையாட முடியாது. இதனால் ஹசரங்கா ஐ.பி.எல். தொடரில் முதல் ஆட்டத்தில் இருந்தே விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com