சேவாக்கின் 20 வருட சாதனையை உடைத்த ஹாரி ப்ரூக்

ஹாரி ப்ரூக் 28 பவுண்டரி 3 சிக்சருடன் 317 (322) ரன்கள் குவித்தார்.இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினால் பாகிஸ்தானை வீழ்த்தி விடும்.
சேவாக்கின் 20 வருட சாதனையை உடைத்த ஹாரி ப்ரூக்
Published on

பாகிஸ்தான்- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 7-ம் தேதி துவங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 556 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக கேப்டன் ஷான் மசூத் 151, அப்துல்லா ஷபிக் 102, ஆகா சல்மான் 104* ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜாக் லீச் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 823-7 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 317, ஜோ ரூட் 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக இங்கிலாந்து உலக சாதனை படைத்தது.

பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக நாசிம் சா 2, சாய்ம் ஆயுப் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் 267 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் பாகிஸ்தான் 4-ம் நாள் முடிவில் 152-6 என தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. பாபர் அசாம் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த அந்த அணிக்கு களத்தில் ஆகா சல்மான் 41*, அமீர் ஜமால் 27* ரன்களுடன் போராடி வருகின்றனர்.

முன்னதாக இந்தப் போட்டியில் ஹாரி ப்ரூக் 28 பவுண்டரி 3 சிக்சருடன் 317 (322) ரன்கள் குவித்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற இந்திய ஜாம்பவான் வீரேந்திர சேவாக் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 2004-ம் ஆண்டு இதே முல்தான் மைதானத்தில் வீரேந்திர சேவாக் பாகிஸ்தானுக்கு எதிராக 309 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக 310 பந்துகளில் 300 ரன்கள் அடித்த ஹரி ப்ரூக் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது அதிவேகமான முச்சதத்தை அடித்த வீரர் என்ற மேத்தியூ ஹைடன் (362 பந்துகள்) சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். முதலிடத்தில் இப்போதும் இந்தியாவின் சேவாக் உள்ளார். (278 பந்துகள், தென்னாபிரிக்காவுக்கு எதிராக சென்னை 2008).

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com