வீரர்கள் அணி மாறும் விஷயங்கள் வரும் காலங்களில் அதிகம் நடக்கும்- நெஹ்ரா ஓபன் டாக்

ஹர்திக் வேறு ஏதாவது அணிக்கு செல்ல நினைத்திருந்தால் அவரை தடுத்து நிறுத்தியிருக்கலாம். பாண்ட்யா மும்பை அணிக்கு சென்றதால் அதனை செய்யவில்லை.
வீரர்கள் அணி மாறும் விஷயங்கள் வரும் காலங்களில் அதிகம் நடக்கும்- நெஹ்ரா ஓபன் டாக்
Published on

ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ந் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் கால்பந்தில் நடப்பது போல கிரிக்கெட்டிலும் இதுபோன்று வீரர்கள் அணி மாறும் விஷயங்கள் வரும் காலங்களில் அதிகம் நடக்கும் என குஜராத் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் அடுத்த விஷயங்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஹர்திக் பாண்ட்யா மற்றும் முகமது சமி போன்ற வீரர்களின் அனுபவத்தை உங்களால் வாங்க முடியாது. அவர்கள் இருவரும் அணியில் இல்லாதது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எளிதாக இருக்கப் போவதில்லை. கால்பந்தில் நடப்பது போல கிரிக்கெட்டிலும் இதுபோன்று வீரர்கள் அணி மாறும் விஷயங்கள் வரும் காலங்களில் அதிகம் நடக்கும்.

ஆனால், இதனை கற்றுக் கொள்வதற்கான சூழலாக எடுத்துக் கொண்டு அணியினர் முன்னோக்கி செல்ல வேண்டும். குஜராத் அணிக்காக பாண்ட்யாவை தொடர்ந்து விளையாட வலியுறுத்த ஒருபோதும் நான் முயற்சிக்கவில்லை. அதிகம் விளையாடினால் அதிக அனுபவத்தைப் பெற முடியும். அவர் வேறு ஏதாவது அணிக்கு செல்ல நினைத்திருந்தால் அவரை தடுத்து நிறுத்தியிருக்கலாம். அவர் மும்பை அணிக்கு சென்றதால் அதனை செய்யவில்லை.

கில் எப்படி செயல்படுகிறார் என்பதைப் பார்க்க மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும். அவர் அப்படிப்பட்ட வீரர். அவர் மூன்று வடிவங்களிலும் சிறப்பாக விளையாட விரும்புபவர். அவர் ஒரு நபராக வளர்ந்தால், அவர் நிச்சயமாக முன்னோக்கி செல்லும் சிறந்த கேப்டனாக இருப்பார்.

இவ்வாறு நெஹ்ரா கூறினார்.

ஐபிஎல் தொடரின் மினி ஏலத்திற்கு முன்னதாக ஹார்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியது. அதுமட்டுமின்றி அணியின் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மாவை அப்பதவியில் இருந்து நீக்கி, ஹர்திக் பாண்ட்யாவை அணியின் கேப்டனாக அறிவித்தது. இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com