இறுதிப்போட்டியில் 2 முறை தோல்வி.. உலக கோப்பையை உச்சி முகர்ந்த முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ்

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கோப்பையை கையில் வாங்கி மகிழ்ச்சியில் கொண்டாடினார்.
இறுதிப்போட்டியில் 2 முறை தோல்வி.. உலக கோப்பையை உச்சி முகர்ந்த முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ்
Published on

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இதனையடுத்து கோப்பையுடன் இந்திய அணி வீராங்கனைகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதன்பின்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கோப்பையை கையில் வாங்கி மகிழ்ச்சியில் கொண்டாடினார்.

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி 2005, 2017 என 2 முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால் அவரால் கோப்பையை வெல்லமுடியவில்லை. அப்போது கைநழுவி போன கோப்பை கனவு இப்போது நனவாகியுள்ளது.

மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் என்று போற்றப்படும் மிதாலி ராஜ், 23 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் ஆடியுள்ளார். குறிப்பாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் (232 ஆட்டத்தில் 7,805 ரன்) என்ற சாதனையை இப்போது அவர் தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com