ஆட்டநாயகன் விருதை அர்ப்பணிக்கிறேன்: யாஷ் தயாளை பாராட்டிய டூ பிளசிஸ்

முதலில் ஆடிய பெங்களூரு 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆட்டநாயகன் விருதை அர்ப்பணிக்கிறேன்: யாஷ் தயாளை பாராட்டிய டூ பிளசிஸ்
Published on

பெங்களூரு:

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை யாஷ் தயாள் வீசினார். அதில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து தோனியின் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். கடைசி ஓவரில் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தது.

இந்தப் போட்டியில் ஆர்.சி.பி. அணியின் கேப்டன் டூ பிளசிஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அப்போது அவர் கூறியதாவது:

லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்ததில் மகிழ்ச்சி. முதலாவதாக பேட் செய்ய நான் ஆடிய ஆடுகளங்களில் மிகவும் கடினமானதாக இந்த ஆடுகளம் இருந்தது. கடந்த 6 போட்டிகளாக எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். ஸ்ட்ரைக் ரேட்டும் சிறப்பாக இருந்தது.

இலக்கு சற்று நெருக்கமாக இருந்தபோது தோனி களத்தில் இருந்தார். பலமுறை வெற்றிகரமாக அதை அவர் செய்துள்ளார் என எண்ணினேன். ஈரமான பந்தில் எங்களது பந்துவீச்சை மாற்ற முயற்சித்தோம். ஆட்ட நாயகன் விருதை யாஷ் தயாளுக்கு வழங்க விரும்புகிறேன். அவர் பந்துவீசிய விதம் நம்ப முடியாததாக இருந்தது. அதற்கு அவர் தகுதியானவர்.

கடைசி ஓவர் வீசுவதற்கு முன் பந்தில் அதிகம் பேஸ் வேண்டாம் என அவரிடம் சொன்னேன். அவரது திறனை நம்புமாறு சொன்னேன். முதல் பந்தில் யார்க்கர் முயற்சித்தார். அடுத்தடுத்த பந்துகளில் வேகத்தை மட்டுப்படுத்தினார். அது பலன் தந்தது.

எங்களுக்கு பார்வையாளர்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி. எங்களது முதல் இலக்கு நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைவது. இதை இந்த நேரத்தில் அனுபவிப்பது அவசியம் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com