

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மதிய உணவு இடைவேளையின்போது மழை குறுக்கீடு செய்தது. இதனால் நீண்ட நேரம் போட்டி பாதிக்கப்பட்டது.
இறுதியாக 64 ஓவர்கள் வீசப்பட்டன. இதில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு குழுவை கிறிஸ் வோக்ஸ் வழி நடத்திச் சென்றார். நேற்றைய ஆட்டத்தின்போது அவரது தோள்பட்டையில் பலத்த காயம் (shoulder dislocation) ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் 5ஆவது டெஸ்டில் மேற்கொண்டு விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ் வோக்ஸ் விளையாடாதது உறுதியானால் அது இங்கிலாந்து அணிக்கு பெரிய இழப்பாகும். இங்கிலாந்து அணியில் ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.