ரோகித் - கோலி போராட்டம் வீண்: இந்தியாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா 138 ரன்களை குவித்து அசத்தினார்.
ரோகித் - கோலி
Published on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி 50 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 387 ரன்கள் குவித்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு 388 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து தரப்பில் பென் டக்கெட் சதம் (141)விளாசினார். ஜாக்கோப் பெத்தேல், ஜோ ரூட் அரைசதம் விளாசினர்.

இந்திய அணி சொதப்பல்:

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முறையே 138 மற்றும் 77 ரன்களை எடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தது.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 74 ரன்களையும், இஷான் கிஷன் 14 ரன்களையும் எடுத்தனர். ஸ்ரேயஸ் அய்யர் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களையே எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 360 ரன்களையே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர் வெற்றி:

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெல்ல 1-1 என்ற சமனில் இருந்தது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

X

Maalai Malar
www.maalaimalar.com