

துலீப் டிராபி காலிறுதி போட்டிகள் இன்று தொடங்கின. பெங்களூருவில் நடைபெற்று வரும் ஒரு காலிறுதி போட்டியில் மத்திய மண்டலம்- வடகிழக்கு மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற வடகிழக்கு மண்டலம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மத்திய மண்டல அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஆயுஷ் பாண்டே 3 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ஆர்யன் ஜுயல் 60 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.
அடுத்து டேனிஷ் மாலேவார் உடன் கேப்டன் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரஜத் படிதார் 96 பந்தில் 21 பவுண்டரி, 3 சிக்சருடன் 125 ரன்கள் விளாசினார். மறுமுனையில் விளையாடிய டேனிஸ் வாலேவார் சதம் அடித்ததுடன், இரட்டை சதம் நோக்கி முன்னேறினார். அவர் 219 பந்தில் 198 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அவருடைய ஸ்கோரில் 35 பவுண்டரிகள், 1 சிக்சர் அடங்கும். முதல்நாள் ஆட்ட முடிவில் மத்திய மண்டலம் 2 விக்கெட் இழப்பிற்கு 432 ரன்கள் குவித்துள்ளது.
பெங்களூருவில் நடைபெற்று வரும் மற்றொரு காலிறுதியில் வடக்கு மண்டலம்- கிழக்க மண்டலம் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
வடக்கு மண்டல அணி வீரர்கள் அதிக ரன்கள் குவிக்கவில்லை என்றாலும், குறிப்பிடத்தகுந்த வகையில் ரன்கள் சேர்த்தனர். அதேவேளையில் விக்கெட்டுகளையும் இழந்தனர்.
ஷுபம் கஜூரியா 26 ரன்களும், அன்கித் குமார் 30 ரன்களும், யாஷ் துல் 39 ரன்களும், ஆயுஷ் படோனி 68 ரன்களும், நிஷாந்த் சிந்து 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். வடக்கு மண்டலம் 75.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீடு செய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏறக்குறை இத்துடன் முதல்நாள் ஆட்ட நிறைவடைய வாய்ப்புள்ளது. கணையா வதாவன் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கிழக்கு மண்டலம் அணி சார்பில் மணிஷி 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.