

இந்திய அணி வீரரான ரமண் தீப் சிங் தனது நீண்டநாள் காதலியான சார்லி சவுகானை திருமணம் செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரரும், ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரருமான ரமண் தீப் சிங், பஞ்சாப் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்திய அணிக்காக 2 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரமண் தீப் சிங், அதிரடி பேட்டிங், அபாரமான பீல்டிங்கிற்குப் பெயர் பெற்ற வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்.
2024 ஐபிஎல் தொடரில் கே.கே.ஆர். அணி கோப்பையை வென்ற போட்டியில் ரமண் தீப் சிங் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரமண் தீப் சிங்குக்கும், இவரது நீண்டகால காதலியும், நடிகையுமான சார்லி சவுகானுக்கும் பஞ்சாபில் உள்ள குருத்வாராவில் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர்.
இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், மும்பை இந்தியன்ஸ் வீரர் நமன் தீர், மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அஷ்வினி குமார் மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் வீரர் ஜசிந்தர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சார்லி சவுகானும், ரமண் தீப்பும் கடந்த 8 ஆண்டாகக் காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
புதிய இன்னிங்சை தொடங்கியுள்ள இவர்கள் இருவருக்கும் சுப்மன் கில் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.