வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல்நாளில் இலங்கை 314/4

திமுத் கருணாரத்னே 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.குசால் மெண்டிஸ் 93 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
குசால் மெண்டிஸ்
குசால் மெண்டிஸ்
Published on

வங்காளதேசம்- இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் இன்று சட்டோகிராமில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

நிஷான் மதுஷ்கா- திமுத் கருணாரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் குவித்தது. அரைசதம் அடித்த மதுஷ்கா 57 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து 2-வது விக்கெட்டுக்கு கருணாரத்னே உடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதத்தை சதமாக மாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுத் கருணாரத்னே 86 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 93 ரன்னிலும் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.

அடுத்து வந்த மேத்யூஸ் 23 ரன்னில் வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு தினேஷ் சண்டிமல் உடன் தனஞ்ஜெயா டி செல்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

இலங்கை அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்துள்ளது. சண்டிமல் 34 ரன்களுடனும், தனஞ்ஜெயா டி சில்வா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்காளதேசத்தின் அறிமுக வீரர் ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட் கைப்பற்றினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com