பென் டக்கெட் சதம்: ஆஸ்திரேலியா வெற்றிபெற 310 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பென் டக்கெட் சதம்: ஆஸ்திரேலியா வெற்றிபெற 310 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து
Published on

பிரிஸ்டோல்:

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றுள்ளன.

இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி பிரிஸ்டோலில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே அந்த அணி அதிரடியில் இறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் பிலிப் சால்ட் 27 பந்தில் 45 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து இறங்கிய வில் ஜாக்ஸ் டக் அவுட்டானார்.

3வது விக்கெட்டுக்கு இணைந்த பென் டக்கெட், ஹாரி புரூக் ஜோடி அதிரடியில் மிரட்டியது. ஹாரி புரூக் அரை சதம் கடந்தார். இந்த ஜோடி 132 ரன்கள் சேர்த்த நிலையைல ஹாரி புரூக் 72 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பொறுப்புடன் ஆடிய பென் டக்கெட் சதமடித்து அசத்தினார். அவர் 107 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

கடைசி கட்டத்தில் போராடிய அடில் ரஷித் 36 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், இங்கிலாந்து அணி 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டும், ஆடம் ஜாம்பா, ஆரோன் ஹார்டி, மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com