"கனவு நனவான தருணம்" ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை வென்ற சூர்யவன்ஷி

சூர்யவன்ஷி மூன்று இன்னிங்ஸ்களில் மொத்தம் 151 ரன்களை குவித்தார்.
vaibhav sooryavanshi
Published on

எனது இயல்பான டி20 ஆட்டத்தை வெளிப்படுத்த அணி எனக்கு ஆதரவளித்தது" - ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்ற பிறகு சூர்யவன்ஷி கருத்து.

'ஆட்ட நாயகன்' மற்றும் 'தொடர் நாயகன்' விருதுகளை வென்ற பிறகு, இளம் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்த சாதனையை தனது "கனவு நனவான தருணம்" என்று குறிப்பிட்டார். மேலும், தனது இயல்பான டி20 ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதித்ததற்காக அணி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார்.

முழுமையான வெற்றி:

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், சூர்யவன்ஷி மூன்று இன்னிங்ஸ்களில் மொத்தம் 151 ரன்களை குவித்தார்; அவரது சராசரி 50.33 ஆக இருந்தது.

முதல் டி20 போட்டியில், சூர்யவன்ஷி 19 பந்துகளில் அதிரடியாக 50 ரன்களை எடுத்தார். மூன்றாவது போட்டியில் 49 பந்துகளில் நிதானமான அதேசமயம் சிறப்பான 81 ரன்களை குவித்து, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்ல முக்கிய பங்காற்றினார்.

நல்ல தொடக்கம்:

இது குறித்து பேசிய வைபவ் சூர்யவன்ஷி "மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனக்கு ஒரு கனவு நனவான தருணம். முதல் முறையாக ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ளேன். இங்கு மேற்கொள்ளப்பட்ட பயிற்சிகள் சிறப்பாக இருந்தன.

பயிற்சியாளர் மற்றும் கேப்டன் உட்பட அனைவரும் எனக்கு ஆதரவளித்தனர். எனது வழக்கமான டி20 ஆட்டத்தை விளையாடவும், அணிக்கு நல்லதொரு தொடக்கத்தை அளிக்கவும் முயன்றேன். நல்ல தொடக்கம் கிடைத்ததும் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடவும் முயற்சித்தேன்.

நான் இங்கு (ஹராரேவில்) 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையிலும் விளையாடியுள்ளேன், இங்கு விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பயிற்சியின் போது நான் என்ன செய்கிறேனோ, அதையே போட்டிகளிலும் செயல்படுத்த முயற்சிக்கிறேன்," என்று போட்டிக்கு பிந்தைய பரிசளிப்பு விழாவில் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com